1
வெற்றி பெறா பயணங்களில்
கவலையே இல்லை எனக்கு.
பறக்கும் போதே
இறகு முறிந்து விழுந்திருக்கிறேன்,
சுவற்றிலடித்த பந்தாய்
திரும்பி வந்திருக்கிறேன்.
ஆயிரம் முறை தொடங்கி இருக்கிறேன்
முதலில் இருந்து.
ஆனாலும் எனக்கு
அதிலெல்லாம் கவலையே இல்லை.
ஒருமுறை கூட நான்
இலக்கை தொட்டதே இல்லை.
அதுதான்
அது மட்டும் தான்
அவ்வளவு சலிப்பாயிருக்கிறது.
நூறு பூஜியங்களுக்கு
அர்த்தம் தரும் இடமிழந்து
தனியொரு பூஜியமாய் நிற்பதிலும்
கொடிதாய் வேறென்ன இருக்கிறது
2
இறுக்கி பூட்டப்பட்ட ஜன்னல்கள்
இறகுகள் முறிபட்ட மின்மினி.
நட்சத்திரங்கள் திருடப்பட்ட வானம்.
வண்ணம் களைந்து
இரவின் கருநிறம் பூசியிருக்கும்
என் அறை சுவர்கள் என
பெருங்குரல் எடுத்து அழும்
இந்த அடர் மௌனத்தின்
கணம் தாளாது
பிடி நழுவிய சில துளிகள் தான்
தெறித்திருக்க கூடும்
உங்கள் பக்கங்களில்
உங்கள் விசாரிப்புகளில்
அக்கறையில்
அன்பில்
எவ்வளவு களைத்திருக்கிறேன் தெரியுமா?>
என் மேலான
உங்கள் கேள்விகளில்
சந்தேகங்களில்
முன் முடிவுகளில்
நம்பிக்கைகளில்
எவ்வளவு சலித்திருக்கிறேன் தெரியுமா?
எதிர்பார்ப்பற்ற புன்னகையும்
நிபந்தனையற்ற அன்புமே
என் தேவையென்பது
உங்களுக்கு தெரியுமா?
அன்பிற்குரியவர்களே,
கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள்
அவ்வளவு சிரமமாய் இருக்கிறது
மூச்சிவிட…