cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


கொடிமுகில்

துகிலாக மேகம்
நிலவை மூடிய
அந்த நொடியில் தான் சொன்னேன்

முகில் சுமக்கும் மழைக்கு
மின்னல்
தொப்புள் கொடி என்று

வானவில்லை வானம்
தொடியாக அணியும்
நேரத்தில்

உனக்கு ஏதேனும்
தோன்றினால் சொல்

அதை விடுத்து
விண்மீன்களைப் பிடிக்க
தூண்டில் கேட்காதே.

முத்தம்

வானம் கன்னம்
நட்சத்திரங்கள் முத்தங்கள்

ஒரு கன்னத்தில்
முத்தமிட்ட நட்சத்திரங்கள்
முத்தமிட இன்னொரு கன்னம் கேட்டால்

பிரபஞ்சம் எங்கே போகும்
இன்னொரு வானத்திற்கு?

முத்தங்கள்
அன்பை அடையும் அத்தங்கள்
மூங்கில் போடும் சத்தங்கள்
சில நேரங்களில் மௌன யுத்தங்கள்.

நெய்தல்

அலை நுரையாகும் கரையில்
அணிற்பல் முண்டகமாய்
உன்னைக் கண்ட எற்பாட்டில்
நான் முள்ளிலைத் தாழையாய்
சொல் இழைத்து கவி வடித்தேன்

சங்கறுத்த கைவளை அணிந்து
வலைஞி போல் நீ வீசிய கண்வலையில்
நிலவுநிற வெண்மணலின்
பொன்வரி அலவனாய் நான்
மாட்டிக் கொண்டு தவித்தேன்

சிப்பியின் கர்ப்பத்தில்
விளைந்த முத்து
சிரிக்கும் போது
உன் பற்களில் உருளும்

அதைக் கண்டு
அணிச்சிறைக் குருகாய்
என் மனம் நரலும்

ஊதை காற்றாய்
நீ வீசிச் செல்ல
கைதை மலராய்
நான் நடுங்குகிறேன்

இமை தீயும் கண்ணீரால்
இம்மைக்கும் மறுமைக்கும்
நீயே வேண்டும் என
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நிகழ்த்துகிறேன்.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website