நம் இறுதி சாட்டில் 8.30 க்கு என்னை
அழைப்பதாக சொல்லியிருந்தாய்
என் டிஸ்ப்ளே கடிகாரத்திற்கு
மஞ்சள் நிறச்சுவர் ஒன்றிருக்கிறது
அதன் பெருத்த வயிறு ஆர்ப்பரிக்கும்
பெருங்கடலை உண்டுச் செரித்திருக்கும்
அப்பெருங்கடலில் என்றோ மூழ்கிய கப்பலின்
உடைந்த உதிரிபாகங்கள் மிதந்தலையும்
நீயற்ற என் நாட்களைப் போன்ற அச்சிறு துண்டுகளை
சுவற்றோர பல்லிகள் நுகர்ந்துச் செல்லும்
அப்பல்லிகள் பிடிப்பின்றி கீழே விழும்
சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடக்கும்
நான் வளர்க்கும் பூனைக்குட்டிகள்
பிரபஞ்சம் எங்கும் ஓடித்திரியும் அவற்றை
எப்போதோ என் துயரக்கவிதையொன்றில் சொல்லிவிட்டேன்
இன்னும் 8.30 ஆகவில்லைதான்
ஆகவே,
எப்போதோ எழுதப்பட்டக் கவிதைகளை,
ஓடித்திரியும் என் பூனைக்குட்டிகளை
அலையும் சுவற்றோர பல்லிகளை,
உடைந்து கிடக்கும் கப்பலின் உதிரி பாகங்களை,
ஆர்ப்பரிக்கும் மனப்பெருங்கடலை,
பருவங்கள் பூக்காத மஞ்சள் நிறச்சுவரை,
எக்காலத்திலும் நகராத இக்கடிகாரத்தை
பின்னர் நூற்றாண்டுகளாக என்னை காத்திருக்கச் செய்யும்
உன் வார்த்தைகளை
நீ மோகப்புன்னகைக்கும்
என் டிஸ்ப்ளே புகைப்படத்தையும்
இப்படியே பார்த்து கொண்டிருப்பேன்
தினமும் 8.30 ஆகும் வரை.
தூரதூரத்தில் மினுங்கும் சிற்றொளியை
பேரிருளிலிருந்துப் பார்த்தேங்கும்
அற்பச் சிற்றெரும்பு நான்
என்றுமே விடியாத வானமென்று
ஒன்றுமில்லையென உரக்கச்சொல்லும்
அச்சிற்றொளியின் மென்குரல்
தனிமை ஓங்கிய அடர்வனத்திலும்
ஆழிரைச்சல் சூழவாழுமென் காதுகளில்
ஒருபோதும் கேட்பதில்லை
“நித்யம் நித்யம் ”
என்றலரும் என் மனப்பறவையை
கடந்தகால எண்ணக் கூண்டில்
சிறைவைத்துவிட்டுதான்
தூரத்தில் மினுங்கும் சிற்றொளியை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மேலுமொன்று
நானொரு சிற்றெரும்பு என்பது
நான் மட்டுமே அறிந்த இரகசியம்!
கவிதைகள் வாசித்த குரல் : சாய் வைஷ்ணவி
Listen On Spotify :