cropped-logo-150x150-copy.png
0%
Editor's Pick இதழ் 28

ராம் வசந்த் கவிதை


போனவுடன்,
இந்தாடா கைலி, கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்
பயணக் களைப்பு
நிம்மதியாய் மாறுகிறது.

போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்
சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும்
அவசியமில்லை.

சமையலறையில்
உட்கார்ந்து சாப்பிட முடிகிறது.

அங்கிள் என நம்மை விளிக்கும் குழந்தையை
மாமான்னு சொல்லு
என ஒரு குரல் திருத்துகிறது.

இன்னுமொரு தோசை வேண்டுமென
கேட்க முடிகிறது.

அங்கிருக்கும் அப்பா
நம் தோளின் மீது கைபோட்டு பேசுகிறார்.

போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்..
சாப்பிடுகையில் சிரித்து
பொறை ஏறுகிறது..
அவ்வீட்டு மகளோ மருமகளோ தாயோ
பதறித் தலையில் தட்டுகிறார்கள்.

திரும்புகையில் அத்தனை பேரும்
வாசல் வந்து வழி அனுப்புகிறார்கள்.

போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டின் வாசலில்
ஒரு செல்ஃபி எடுக்கிறோம்.

வழக்கொழிந்த கேள்வியை
அவ்வீடு கேட்கிறது

“ மறுபடியும் எப்ப வருவீங்க …”


கவிதைகள் வாசித்த குரல்:
கலை சாய் அருண்
Listen On Spotify :

About the author

ராம் வசந்த்

ராம் வசந்த்

ராம் வசந்த்தின் இயற்பெயர் ராமமூர்த்தி. காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக்குடியில் பிறந்தவர், இன்று ஹைதராபாத்தில் ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் வணிகத்தில் வெற்றி பெறும் நுட்பங்களையும் வழிமுறைகளைகளையும் ”வணிகத் தலைமை கொள்” எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய தொடர் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இத்தொடர் நூலாகவும் வெளியாகி இருக்கிறது. எளிமையும் நுணுக்கமும் மிக்க கவிதைகள் எழுதக்கூடியவர். இவரின் கவிதைகள் ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website