நிலத்தின் மேளத்தை
மழை இசைக்கிறது பார்
தளிரின் தாகத்தை
அதன் கதை தணிக்கிறது கேள்
தனித்துறங்கும் காடுகள்
ஊடலுக்கும் கூடலுக்கும்
மழையின் நெகிழ்ந்த தேகத்தை
மலர்த்தி மலர்த்தி
மன்றாட்டு நிகழ்த்துவதைக் கவனி
இதோ இது வனத்தியின் பாதை
வழி நெடுக ஊமத்தை
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு முகிழ்வும்
அவள் கனவுக்கான ஆரத்தி
அதில் துயில் கொள்
பூமி பார்க்கும் கனிகளும்
வான் நோக்கும் மலர்களும்
தனது கண்களில்
விருட்சத்தைக் கொண்டிருப்பதை அறி
பருவத்தின் சுவாசம் நதியென
வன ஆகிருதியில் பிரவாகம் எடுக்கிறது
அதன் தாளங்களில் தளிராட்டம்
காண்
இரவும் பகலும் ஊடுருவும் ஒளியில்
அதன் நளினங்களில் களியாட்டம்
களிப்புறு