cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

அன்பே ! ரகசியா!

கோ.லீலா

ன் ஆன்மா
வானுக்கும் கடலுக்குமாய் அலைவுறுகிறது.

வானெங்கும் என் ஆன்மா இசைக்கும்‌ உன் பெயரை,
பகலில் மேகமாகவும்,
இரவில் விண்மீனாகவும்
வானம் கண் சிமிட்டுகிறது.

வழியெங்கும் தாமிர நிற அரசிலைகளில்‌
உன் பெயரைத்தான் எழுதி வந்தேன்.
எழுத்தற்ற ஓர் உற்சவ இசையாய் இலையும் காற்றும் கூடி
உன் பெயரை இசைக்கிறது.

நீரலையென உன் பெயரை ரகசியமாய்
வேர்களெங்கும்‌ முணுமுணுத்து வந்தேன்,
கிளைகள் தோறும்
தேன்சிந்தும் மலரென உன்பெயரைப் பூக்கிறது.

அன்பே ! ரகசியா!
மேகம் மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் பெயரின் நறுமணம் வீசுகிறது.

நறுமணத்தில் நனைந்த பறவையொன்று
உன் பெயரைக் கதகதப்பிற்குக் கூட்டில் வைக்க
உன் பெயரே பறவைகளின் மொழியாகிறது.

கடலின் அலைகள் உன் பெயரைச்
சலங்கையெனப் பூட்டிக்கொண்டு
ஆர்ப்பரிக்கும் நடன அசைவுகளில்
உன் பெயர் மிளிர்கிறது.

என்னைப் போலவே உன் பெயரைக்
கடலும் பத்திரப்படுத்துகிறது ஒரு சிப்பிக்குள்…
சிப்பி பலவண்ண நிறத்தில் ஒய்யாரமாய்
உன் பெயரை மினுங்குகிறது.

யாரின் பெயர் என்கிறார்கள்?
ரகசியா என்பது
நம்மிருவருக்கும்‌ இடையிலான
ரகசிய‌ பெயர் என்பதால் மரமென்றேன்.

ஏளனமாய்
ஞானம் தேடுகிறாயா என்கிறார்கள்?

ரகசியா !

போகட்டும் விடு மரம் என்பதே ஞானம்தானே!
வேராய் நீயிருக்க…
வேறென்ன வேண்டுமெனக்கு.
வருவேன் விரைவில்
உனக்கான புனித முத்தமொன்றோடு.!


Art Courtesy : deviantart.com

About the author

கோ.லீலா

கோ.லீலா

திருக்குவளையை பூர்வீகமாக கொண்ட கோ.லீலா, தற்போது பொள்ளாச்சியில் வசிக்கிறார். தமிழக அரசு பொதுப் பணித்துறையில் நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளராக பணிபுரியும் இவர் எழுதிய, சூழலியல் சார்ந்த ‘மறைநீர்’ நூலை ‘படைப்பு’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நூல் பலரது கவனத்தையும் பல விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குநர்/ கவிஞர் பிருந்தா சாரதியின் ஹைக்கூ கவிதைகளை முன்வைத்து இவர் எழுதிய “ஹைக்கூ தூண்டிலில் ஜென்” எனும் கட்டுரைத் தொகுப்பு நூலும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அச்சு மற்றும் இணைய இதழ்களில் கோ.லீலா எழுதிய கவிதைகள், கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website