cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

உமா மோகன் கவிதைகள்


1

பிஞ்சுக்கைகளுக்குள் சில நொடி பொதியப்பட்ட
பொன்வண்டைச் சொத்தென்று
மகிழ்ந்து கொண்ட சில நொடிகள்

வாழ்க்கையைப் பொன்வண்டாக்கி மூடிக்கொள்ள
அந்த சில நொடிகளும் வாய்க்காத போதெல்லாம்
ஒழுகிய மூக்கைத்துடைக்கவா
பொன்வண்டைப் பிடிக்கவா எனத்தடுமாறிய
பருவத்தின் குகைக்குள்.


2

சத்தம்போடாதே
சத்தம்போடாதே
கிஞ்சித்தும் மதிப்பதில்லை
கடல்
காகம்
சாலை
மனசு

பழகிப்போன கடல்
பழகிப்போன காகம்
பழகிப்போன சாலை

பழகாத மனசு


3

அரிவாள்மணையின்
கூர் போதவில்லையென்று
வருந்துவாள் அம்மா
மாங்காய் வெட்டுகையில்
தடுக்கி
லேசாய்த்தான் கையை வெட்டியதைச்சொல்லி
அழுத்தமாய் வெட்டியபோதும்
வராத ரத்தம் பற்றி அவளுக்கேதும் புகாரில்லை
மிளகாய்ப்பொடியை வைத்து அமுக்குவாள் ரத்தத்துக்குக்
குறைந்தபட்ச மரியாதையுமின்றி
அவளுக்கு வந்தால் அது தக்காளிச் சட்டினிதான்


4

சாலையில் உருகி ஓடும்
நீரைப் பருகிக்கொள்ள
ஒரு குருவி கூட அமர்வதில்லை
உனக்கு மட்டும்
கானல் நீர்

அட என் சமர்த்தே

ஏமாறுவதென்றாலும்
பெரிதினும் பெரிது கேட்டுத்தொலை
ஊர் உலகம் திரும்பிப்பார்க்கும்


5

வறட்டுப்பிடிவாதங்களில்
மூச்சு முட்டவில்லையா
வேனலுக்குக்கட்ட
அசல் பட்டுக்குக்கூட
இடமில்லை
நீ ஏன் இன்னும்
காக்காப்பொன் சரிகையைக்
கட்டிக்கொண்டு அழுகிறாய்.


 

About the author

உமா மோகன்

உமா மோகன்

புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, ‘துயரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ உள்ளிட்ட கவிதைத்தொகுப்புகளும் ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டு இருக்கிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் பல ஆக்கங்கள் வெளியாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website