படத்தில் மட்டுமே
விலங்குகள் பார்த்த அப்பு
இப்போதுதான் அவற்றை
நிஜத்தில் காண்கிறான்.
முயலும் யானையும்
மயிலும் சிங்கமுமாய்
நொடிக்கொருமுறை மாறும் மேகங்கண்டு
கைநீட்டுவான்
கட்டிப்போட முயல்வான்
கலைந்தவைக் கண்டு
கண்ணீர் வடிப்பான்.
எல்லா மிருகமும்
ஏன் தாத்தா வெள்ளையா இருக்கு?
எல்லா மிருகமும்
ஏன் பாப்பா தவழ்ந்தே போகுது?
என்றவன் கேள்விக்கு
இன்றுவரை விடையில்லை.
ஆனால்
அன்றிலிருந்துதான்
என் கவிதைகளுக்கு
இறக்கைகள் முளைக்கத்தொடங்கின…
எல்லாவற்றையும்
அளந்து கொடுப்பவர் அப்பா.
அக்காவுக்கு கொடுக்கும் அன்பில்
எடைக்கல்லுக்கு
எதிர்பக்கம் முள் நிற்கும்
அண்ணனுக்கு கொடுக்கும் அன்பில்
மிகச்சரியாய் நடுவில் நிற்கும்
பாப்பாவுக்கு மட்டும்
கைநிறைய அள்ளிக்கொடுக்கும் அப்பா
கடைசிவரை துல்லியமாய் நிறுத்தவில்லை
அம்மாவுக்கு கொடுப்பதன்
ஏற்ற இரக்கத்தை…