cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைக் களம்

கனவு நீங்கிய தருணங்கள்


நிலைப்படி தாண்டாத
மனத்தின் இடுக்குகளில்
புரையோடிப் போயிருந்தன
களிம்பிடாமல் வைத்திருந்த
இருத்தலின் காயங்கள்..

நித்தமும் எரிந்து
சமைத்துச் சலித்திருக்கும்
அடுப்பில் பொங்கிப்
பரவியிருந்த பாலின் கறையை
சுத்தம் செய்யாமலே
உறங்கச் செல்கின்றாள்

அவள் இரவுகளுக்கும்
விடியல்களுக்குமான
இடைப் பட்ட பொழுதுகளில்
வெகுதூரம் பயணிக்கிறாள்

ஆணிவேர்களை
அலட்சியம் செய்து விட்டு
உதிரும் இலையென
இலகுவாய் மிதந்து
காற்றில் அலைகிறாள்..

காய்ந்த சிறகுகளில்
பெரும் அனல் மூட்டி
கையில் திணிக்கப்பட்ட
வழிகாட்டி வரைபடத்தை
இலக்குகளோடு சேர்த்து
எரித்துச் சாம்பலாக்குகிறாள்

நிலவற்ற அடர்காட்டில்
மின் மினிப் பூச்சிகளின்
ஒளி பற்றி அடியெடுத்து
நெடுந்தூரம் நடக்கிறாள்..

வாடையில் வெம்மையாய்
வெப்பத்தில் குளிராய்
மழையில் வேட்கையாய்
தனக்குத் தானே இயற்கையை
தகவமைத்துக் கொள்கிறாள்

பயணத்தின் முடிவில்
பால்வீதி தென்படுகிறது.
நீந்த யத்தனிக்கும் முன்
விடியலின் ஒளி வீச்சில்
நிறம் மாறியது பாதைகள்..

கரி துடைக்கும் துணியால்
பால்கறையை சுத்தம்
செய்து கொண்டிருக்கிறாள்
கனவு நீங்கிய தருணங்களின்
சாயல்கள் சிறிதுமற்று..


எழுத்து பிரசுரம் ( Zero Degree Publishing) வெளியீடாக 2019-ஆம் ஆண்டு வெளியான லதா அருணாச்சலத்தின் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை இது.

Published with permission of the author, Latha Arunachalam

 

About the author

லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம்

சென்னையைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கிலம் மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர். நைஜீரியா தேசத்தின் லாகோஸ் நகரில் வசித்து வருபவர் . இவரது முதல் நூல் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பு (எழுத்து பிரசுரம்) இரண்டாவது நூல் எழுத்து பிரசுரம் வெளியிட்ட ”தீக்கொன்றை மலரும் பருவம்” மொழிபெயர்ப்பு நாவல் (மூல ஆசிரியர்: நைஜரீய எழுத்தாளர் அபுபக்கர் ஆடம்). 2022- ஆம் ஆண்டு நூல் வனம் வெளியீடாக ஆக்டோபஸின் பேத்தி -மொழிபெயர்ப்பு சிறுகதைகள், காலச்சுவடு வெளியீடாக “பிராப்ளம்ஸ்கி விடுதி” – நாவல் (மூல ஆசிரியர்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்) , 2023 -ஆம் ஆண்டு சால்ட் பதிப்பக வெளியீடாக ”ஆயிரத்தொரு கத்திகள்” (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) ஆகிய நூல்கள் வெளியாகி இருக்கிறது.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களிலும் இவரது சிறப்பான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தீக்கொன்றை மலரும் பருவம் நாவலுக்கான மொழிபெயர்ப்பு தமிழ் வாசகப் பரப்பில் அதிக கவனத்தை பெற்றது. இந்த நாவலுக்காக விகடன் விருதும், வாசகசாலை விருதும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website