‘கற்பூர நாயகியே..’
கைவேலை நின்று
கனகவல்லி ஆவாள்
‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’
பெட்டி அருகில் நிற்பவள்
அஸ்வினி ஆகிப்போவாள்
நகரப் பறவை ஒன்று
சிறகொடிக்கப்பட்டு
கிராமத்துக் கூண்டில்
மனசின் ரணத்திற்குப்
பாடல்கள் களிம்பு
தண்ணீரெனில் அத்தனைப் பிரியம்
குழந்தைகள் தோற்றுப் போகும்
பிறிதொரு நாளில்
பெருந்தாகம் கொண்டு
நதியெல்லாம் குடித்து
கவர்மென்ட் பிணவறையில்
ஊதிப் பெருத்தபடி
கண்டடைந்தோம்
அம்மாவை
அஸ்தி கரைத்த நதியின்
நீர்குடித்த நாணல்களும்
சட்டி புதைத்த
வில்வமும்
சற்றே கவனித்தால்
பரவும் பாடலுக்கு
இன்னமும் தலையாட்டும்
‘கற்பூர நாயகியே’.