பிணவறை செல்வது இரண்டாம் முறை
விஷம் குடித்துச் செத்தான்
பங்காளிச் சித்தப்பன்,
ஆளுயரக் கதவுகளின் பின்னால்
என்ன நடக்கிறதென்று
அனைவருக்கும் ஆர்வம்,
வெகுநேரம் கழித்து
சீருடை அணிந்தவர் கதவு திறந்து
விட்டார்,
காக்கிச்சட்டை அணிந்தவர்
இறந்தவரின் பையனை
அடையாளம் காட்டச்சொல்ல
காசுள்ளதும் இல்லாததும்
ஒன்றாய்க் கிடந்தது,
குடல்முறுக்கி ஓங்கரிக்க
வெளியோடி வந்திட்டேன்
தூக்கி வந்து டேபிளில்
கிடத்திவிட்டு வெளிவந்தோம்
பொட்டலமாய் வெளிவந்தார்
சற்றே தாமதமாய்,
மூன்று வாரங்களுக்கு
முன்புதான்
வெள்ளையும் சொள்ளையுமாம்
முழக்கமிட்டார் எங்களிடம்
‘மத்தவங்களுக்காக நடிக்கப் பிடிக்காது
முடிசாயம் அடிப்பதில்லை’
இரண்டு பெற்றுக் கொடுத்தபின்
வீடு மறந்து சென்றவர்
பையனைக் கட்டி
அழுதுகொண்டிருந்தார்
கதவுகளின் முன்னால்,
எவரேனும் தகவல் சொல்லி
இருக்கக் கூடும்
வாகனத்தை அனுப்பி விட்டு
வெளியே நடக்கையில்
முன்னாளை மேலே அனுப்பி விட்டு
இந்நாளுடன் இருசக்கர வாகனத்தில்
சடுதியாக ஏறி காணாமல்
போய்விட்டார்
மூணாம் நாளில் கரைத்த
அஸ்தியுடன்
சுழித்தோடிச் செல்கிறது
காலகாலமாக கூடுதுறையில் காவிரி.