பறவையின் சிறகுகளை கொண்டு
வெளியேற வேண்டும் மாயா.
நான்கு சுவர்களுக்கு மத்தியில்
உறங்கி எழும்
வாழ்வு சலிக்கிறது.
கனவு தேசத்தில்
தேசாந்திரியாய் இருக்கிறேன்.
நெடிதுயர்ந்த மலையின்
ஒற்றையடிப் பாதையில்
தனித்து நடந்து செல்கிறேன்.
இடதுபுறம் சலசலத்து
ஓடிக் கொண்டிருக்கிறது நதி.
எதிர்ப்புறத்தில் பாசி படிந்த
பாறையிலிருந்து
மலையின் கண்ணீரென கசிகிறது மெல்லிய ஈரம்.
ஒரேயொரு புத்தகப் பையுடன்
இலக்கற்று, ஓய்வற்று
மலைப்பாதைகளில்
போய்க் கொண்டிருக்கிறேன்.
கால்கள் நடை தளரும் சிறுகணமொன்றில்
அகண்ட பாறையொன்றின்மேல்
மல்லாந்து படுத்துக் கொள்கிறேன்.
நதியின் சிறு இசையே தாலாட்டாய் மாறிப் போக,
இரவுக்குள் கரைந்துவிடுகிறேன்.
நட்சத்திரங்களும் மின்மினிகளும்
மின்னித் திரியும் அவ்விரவுகளில்
பசிக்கவேயில்லை.
யாருக்கும் வாடகை தரவேண்டியதில்லை.
மனிதர்கள் யாருமற்ற அப்பிரதேசத்தில்
உடலை மேயும் கண்கள் இல்லை.
வீடற்று வாழ்தலென்பது
பிரபஞ்சத்தைத் தன்வசமாக்கிக் கொள்ளும் தந்திரம் தானே மாயா.
வீடெனும் சொல்லிலிருந்தும்
வெளியேற வேண்டும்.
ஆனால் மாயா,
எனது வருகைக்காக வாசல் பார்த்துக் காத்திருக்கும் நாய்க்குட்டியின் கண்களை
நான் பார்க்காதிருக்க வேண்டும்.
பூனைக்குட்டிகளின் பசித்த குரலைக் கேட்காமலிருக்க வேண்டும்.
Feature Image Courtesy : The New York Times
வாழ்த்துகள்… வீடற்று வாழ்தல் கவிதை பாஷோவை நினைவூட்டியது…