முதல் பூ பூத்து பற்றியெரிந்த ஜோதியில்
மனதில் தோன்றியது ஒரு முகம்.
ஐப்பசியின் அடைமழை
காலம்முந்தி புரட்டாசியில்
கொட்டி தீர்த்த ஓர் இரவில்
வெட்டவெளிக் காட்டில்
உயிர் நனைய முத்தமிட்டு
வாழ்வின் ஈரமாய்
ஒட்டிக்கொண்டது அம்முகம்.
முதல் கனவு கலைந்து
துவண்டுக் கிடந்து,
பின் உணர்வுத்திரட்டி எழுந்து நடக்கையில்
கைப்பிடித்து காலம் முழுவதும் உடன்வர
சத்தியமிட்டது ஒரு முகம்.
ஏது கவலை என்ற போதும்,
எத்திசை தேடி ஓடித் திரும்பினாலும்,
தோள் சேர்த்து சிறுஅணைப்பால்
வானளவு துயர் துடைத்து
தாய் போல் காத்து நிற்கும் நறுமுகம்.
’என்ன பத்திரமா வச்சிக்க’
என்றெனது ’பச்ச ஸ்கர்ட்டை’ கையில் சுற்றி
மடிகட்டிக் கொண்டு தூங்கும்
களங்கமற்ற நின்முகம்,
முகமற்றிருந்தவளை மீண்டும்
பூத்திருக்க செய்யும் பிள்ளைமுகம்.
கனவு கொடுத்து
காதல் வளர்த்து
வாழ்வு காத்து நிற்கும்
அத்துணை முகங்களையும்
மடி சேர்ப்பித்த
ஆகஸ்ட்டே.. நீ வாழி!
Art Courtesy : Olha Darchuk artfinder.com