cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

அகராதி கவிதைகள்

அகராதி
Written by அகராதி

நீ

அந்தரங்கமாய்

அபிஷேகித்தச் சொற்கள்

கோமுக வழியிறங்கி

நன் நிலத் தன்மையை

இரு நூறாண்டுக்குமாக

நெகிழச் செய்தது

தேவி

பாதம் உணர் மென் நிலையை

உடல் முழுதுமுணர்ந்த நொடி ததும்பிய விசும்பு

நன்னீரீல் நனைக்க

அண்டம் குளிர்கிறது

விளைகிறது உறவொன்று.

 

 

ந்திர ரேகையோடும் பாதங்கள்

மண் தொடாது

மலராய் கைத்தாங்குவதற்கு என்று

வாய்ப்பு நல்கக் கேட்ட அன்பினை

இம்மி இம்மியாகக் கிளை நரம்புகளிலும்

பரவ விட்டு

அன்னப் பாத்திரம் நோக்கும்

பட்டினிக் குழந்தையாக

இதயம் நோக்கும் நொடியில்

எதிர்பார்க்கும் மொழி

“அவ்வளவும் நீ “. . .

 

அணிவகுத்து நிற்கும்

கடமை உரிமையினும்

பெரிதென நீங்கள்

பித்தம் கொள்கையில்

நிஜமென உருவெடுத்தப் பொழுதுகளோ

சாவகாசமாய் கூராயுதத்தில்

கீறிச் சொல்லும்

“அவ்வளவுதான் நீ “

 

 

தோள் அமரா

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களில்

தரையிறங்கா

பறவையின் இறகில்

கனாக்களை வைத்து

நிறமற்று நிலமுமற்று

காற்றிலாடும் களங்கற்ற நேசம்

பொசுங்கும் மணம்

கொல்லவில்லையா!

நிர்கதியான மனதின் விசும்பல்

மயானத்தில் சுழித்து மேலெழும்

புகையினூடே கலந்து

வானேகி

நீர்மத் துளிகளாய் மண்கலக்கையில்

எனையெரித்த இடத்தில்

ரோஜா பூத்திருக்கும்தானே…

 

 

கிளையமரா புள்ளொன்று

தனிமை வனத்திற்குள் பறந்து

தொலையும் திசையெதுவென

சுற்றிக் கொண்டிருந்த நெடுங்காலத்திற்குள்

‘கரமொன்று” நீண்டது

கரத்தின் விரல்களனைத்தும்

தழைத்தோங்கிய

தன் இடமென்று

அமர்ந்து கொண்டது புள்

இறகு நீவி

சிறகசைத்துக் கொண்டது

மகிழ்ந்தது பாடியது

கிசுகிசுத்துக் கொண்டது

பார்வையை வண்ணங்களில்

முகிழ்த்துக் கொண்டது

இதயம் சிம்பொனி இசைத்தது

நீண்டு விரிந்த ‘கரத்திற்கு’

மகுடம் சூட்டியது

விரல்களை

சுவர்க்கமென்று கூவியது.

திடுமென விரல்கள் மடக்கப்பட்டன.

 

 

வித்த ஒரு நாளுக்குப் பின்வந்த

நாட்களில் ‘கரமும்’ காணாமல்

அவலக்குரலெழுப்பி

காடதிர அழுது சிதைந்தது

மரங்களும் பூக்களும்

காய்களும் கனிகளும்

தீய்ந்து போன நெடி வர

அலகைக் காற்றில் தீட்டிக் கவனிக்கிறது

தசையும் காலும்

எலும்பும் மஜ்ஜையும் கூட

பொசுங்கும் வாடை உணர்கிறது

நாற் திசையும் நோக்கி

நடுக்கத்துடன்

தளர்ந்து

குழிந்த விழிகளை

தன் மேல் செலுத்துகிறது….


 

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website