cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்


மணமெனும் மாய ரயில்

எப்போதோ வரப்போகும் ரயிலுக்காக
காத்திருக்கும் சிறுமி
முதலில் மாதங்களை எண்ணுகிறாள்
பிறகு வாரங்களை
பின் நாட்களை
மணிகளை, நிமிடங்களை, நொடிகளை
இதோ அவள் ரயில் வந்துவிட்டது
ரயிலின் பிரம்மாண்டத்தில், நுட்பத்தில், தனித்தன்மையில்
பயந்துபோன அவளுக்கு இப்போது ரயில் ஒரு ராட்சசன்
தடக் தடக் சத்தங்களும்
கோட்டானை ஒத்த கூவுலும்
இயல்பில் அமரவிடாத ஆட்டத்திலும்
ரயிலை வெறுக்கும் சிறுமி
எப்போதுமே வராத
ரயிலை விட்டு இறங்கும் கணங்களை எண்ணத்தொடங்குகிறாள்
நொடிகளை
நிமிடங்களை
நாட்களை
வாரங்களை
மாதங்களை,ஆண்டுகளை, நூற்றாண்டுகளை…

திருமணம் பற்றிய மறைமுக சொற்கள்

காலையில் படுக்கை விரிப்புகள்
கலைந்திருப்பதைக் கண்டு
அம்மா மகிழ்கிறாள்
அப்பாவின் காதில் குசுகுசுக்கிறாள்
இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள்
எனக்கும் கூட சிரிப்பு வருகிறது
முழுபோதையின் கனவுகளில்
நீ மட்டும் புரண்டு கசங்கிய
படுக்கை விரிப்புகளில்
என்னை நான் இதுவரை
கண்டெடுத்ததில்லை தெரியுமா?


Art Courtesy : buzzfeed.com

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website