cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

ரிஸ்மியா யூசுப் கவிதைகள்


1. செவ்வொளி

சாலையின் செங்கம்ப எச்சரிக்கைகளை அகற்றி விட்டார்கள்

குண்டுச்சிமிழ்களைச் சுற்றிய இரைச்சல் நீண்டநாளாய் அடங்கியிருந்தது

ஒளி செய்யும் எல்லா வர்ணங்களையும்
இருள் விழுங்கியிருந்தது

நிழல் சமைத்த
கருரேகை மிருகங்களும்
சுவரோடே மறைந்து போயின

வீடுகள் தோறும்…
புத்தகராக்கைகளில்
சமையற்கட்டு போத்தல்களில்
படுக்கை விரிப்புகளில்
சப்பாத்து அடைசல்களில்
முழுதுமாய்
இருளின் பீதி

இருள்
வீடுகளை அணைத்து
செவ்விளக்கொளிகளை ஏற்றியது

2.

மாமிசப்பட்சிகள்
வெற்றுச்சதை உறிஞ்சி
பாலையில் புதைக்கும்
பசிய நரம்பு மச்சை

கட்டுப்படா மூர்க்க வார்த்தையில் வழுக்கிவிழும்
வாழ்வின் அத்தனைப் பாடுகளும் உடலோடு போய்
உடலைச்சேரும்

நம்மைப் பிரிந்துபோகும் உயிர்
ஊன் விழுதேறி
மீண்டும் மீண்டும்
கொப்புகளில் தங்கும்

நிழலில் ஊறிய இரத்தம்
புளுத்து நெழியும் துடிப்பில்
கானல் வெளுக்கும்
கூதிர் பிறக்கும்.

3.

மாயும் நெஞ்சிடை
சொல்லிய சொல்லில்
அறுந்துவிழும் எல்லாப் பற்றுதல்களிலும்
திரும்பத்திரும்ப ஒன்றையே எழுதிவைத்தேன்

வசதியாக எண்ணிமுடித்த
காலக்கணிப்பில்
இறுதிக்கதறலில்
கருணையற்றுப்போன அறம்
எக்களிக்கும் முகத்தோடு
நெஞ்சை உதைத்தது
கூடு சிதைந்தது.


Art Coutesy : Lu Kuchiki

About the author

ரிஸ்மியா யூசுப்

ரிஸ்மியா யூசுப்

இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சார்ந்த ரிஸ்மியா யூசுப் அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பேராதனைப் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ”சொல்லில் சரியும் சுவர்கள்” தமிழ்நாட்டிலுள்ள கடல் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website