cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

குழந்தையின் கால் படாத மலைகள்


மலைக் கோயில் பாதையில்
முன்னும் பின்னும் படி செதுக்கியவன்
இடையில் மலையை மலையாகவே
விட்டுவைக்கிறான்.
அது சிற்பியும் தெய்வதமும்
சேர்ந்து சிரித்த
சிரிப்பின் கீற்று.

இரக்கம் உள்ள
மலைகளில் ஏறியவர்களால்தான்
இறங்கி
வீடடையமுடிகிறது.

வேண்டுதலுக்காக
ஒவ்வொருபடிக்கும்
சந்தனமும் குங்குமமும்
இருவிரல் வழிய வழிய
வைத்துக்கொண்டிருக்கிறாள்.
தடுக்கிவிழாதே
பார்த்து பார்த்து
ஒவ்வொரு படியும் அவளின்
காதோரம் சொல்கிறது .

எல்லா மலைக்கோயிலிலும்
யாரோ ஓர் அப்பா
தோள் வழியே
இருகால் வழிய வழிய
மலை ஏறுகிறார்.
ஒரு குழந்தையும்
மலை ஏறாத நாளில்
ஏறிய யாரும்
இறங்க முடியாது
என்பது ஐதீகம்
என்று யாராவது ஒருவர்
யாராவது ஒருவரிடம்
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இருகால் வழிய வழிய
தன் குழந்தையுடன்
மலை ஏறுகிறார்.


 

About the author

ஜே.மஞ்சுளா தேவி

ஜே.மஞ்சுளா தேவி

முனைவர் ஜே. மஞ்சுளா தேவி (1971). வானம்பாடி இயக்கம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கோவை ஞானி, கவிஞர் சிற்பி ஆகியோரை குறித்தான ஆய்வு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது உடுமலைப்பேட்டையில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இவரது கவிதைகள் பல வெளியாகி இருக்கின்றன.

இவரது கவிதைத் தொகுப்புகள் :

பாப்பாவின் நட்சத்திரம் (2008),

சுற்றிலும் மனிதர்கள் நகர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள் (2016, புதுபுனல் வெளியீடு),

உழத்தி (2020 , கடற்குதிரை வெளியீடு),

இனி ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டோம் - கொரோனா கவிதைகள் (2020 , வாசகசாலை பதிப்பகம்)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website