- கருணையற்ற கடவுள்
சின்னக் குழந்தை
சற்றே பெரிய குழந்தையிடம்
சொன்னது:
‘அம்மா சொன்னாங்க:
கொஞ்ச நாளுல நானும்
ஒங்கள மாதிரியே
சேல கட்டி
நெறய நகை போட்டு
நெறய இனிப்பு சாப்புடுவன்
அந்த ரூம்ல’
பெரிய குழந்தையுடன்
இப்போது சின்னதுக்கும்
சேர்த்து அழுகிறேன் நான்.
- அப்பாவின் வேலை
அம்மா சொல்வாள்: ‘ஆபிசருன்னு சொல்லிதான் ஒங்கப்பாவக் கட்டுனாங்க’
வாழைத்தாரும் தேங்காயுமாய் காவிரியோடும் மோகனூர் ஆசிர்வதித்தது அப்பாவை
இத்தனைதூரம் சைக்கிள் மிதிக்கிறானே பச்சாதாபத்தில் பரிவுகாட்டியது பனமரத்துப்பட்டி
தனயனைப்போல் தலைகோதியது தலைவாசல்
அன்புகாட்டி நெருக்கமானது அயோத்தியாபட்டினம்
பலமுறை எழுப்பிடும் மேசையில் தூங்கிடும் அப்பாவின் குறட்டை
இன்னா செய்தாரை குறள் சொல்லி மேலாளரை மன்னித்து மாலையுடன் ஓய்வுபெற்றார் ஒருநாளில்
தம்பியின் பத்திரிகை போகாதது அலுவலகப் பதிவேட்டில் பெயரில்லாதோருக்கு மட்டுமே
‘அண்ணனுக்கு ஒங்க வேலை பார்க்கலாமே?’
காலத்தின் கசப்பையெல்லாம் விழுங்கியபடி தலைகுனிந்து சொன்னார் அப்பா:
‘விடியவிடிய எழுதனும், அவமானம் அதிகம், என்னோட போகட்டும்,
வேணாம்ப்பா அண்ணனுக்கு’.