cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

அ.ரோஸ்லின் கவிதைகள்


1)
நீலம் படிந்த 
திரைச்சீலைகளை அனுதினமும் அகற்றியபடி 
கூர் மழுங்கிய சிந்தனைகள்,
புராதனமிக்க அவள் பூர்வம் 
கண்ணகியா மாதவியா அகழாராய்ச்சிக்குள்
நீண்ட காலப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது,
செல்பேசியில்,
வழியும் வக்கிரத்தை
அசிரத்தையாய்க் கடக்கும்
நடு இரவுக் கண்களில்,
கற்களைப் போல் தங்கட்டும்,
இந்த உலகின் கடைசிப்பெண்ணின் கடைசி யோனி.
(உ.பி மொரதாபாத் சிறுமிக்காக)
2)
அக்கம் பக்கம் பார்த்தே 
நகரும் வெட்கம் ,
மணப்பெண் ஆகும்போது
சற்று தயங்கத் தொடங்குகிறது,
பிள்ளைப்பேறுக்கு முன் நிழலாக வருகின்ற வெட்கம்,
குழந்தை ஈன்றெடுக்க,
இன்னும் நடைபயில்கிறது.
உலகின் ஞானோதய கால்கள்
விரைந்து வருகின்றன 
பெண்ணின் மேனி காண
சிவனோடு சக்தி என்ற போதும்
தீராத போகத்தின் 
திறப்பு அவளே,
நோய்கள்
போர்கள்,
வன்முறை,
அவலம்,
பிய்த்துத் தின்கிறது மிச்சம் இருக்கும் தன்மானத்தை
ஆகாசத்தின் மூலையெங்குமிருந்து கண்காணிக்கப்படும்
பெண் உடல் கொண்ட 
நீங்காத நிர்வாணம்,
தினந்தோறும் 
புதிய புதிய பெயர்களில்.
3)
ஆசிரியர் பணியோ
அலுவலக உதவியாளரோ
உதவிக் காவலரோ
ஐடி அலுவலோ
உள்ளாட்சிப் பணியாளரோ
வருமான வரி அதிகாரியோ
மருத்துவரோ
மாவட்ட ஆட்சியரோ,
முதல்வரோ
விண்வெளி விஞ்ஞானியோ,
இராமனுக்கு நீ சீதை 
அவ்வளவுதான்.

About the author

அ.ரோஸ்லின்

அ.ரோஸ்லின்

மதுரை மாவட்டம், டி.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இளம் பருவத்திலேயே கவிதை இயற்றும் திறன் கொண்ட இவர், கல்லூரி பருவத்தில் தனது முதல் கவிதையை எழுதினார். தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும், வரலாறு,கல்வியியல், போன்றவற்றிலும் பட்டங்கள் பெற்றவர். இவர் கவிதைகள் பெண்ணின் அக உணர்வுகளையும், உறவின் நெருக்கடியையும் மிக நேர்த்தியாக பேசுபவை. சங்க கால பெண் புலவர்களுக்கு இணையான கவியாளுமையை கொண்டவர். இவரின் கவிதைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. சுற்றுபுற சூழல் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். தற்போது அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

படைப்புகள் :
மழை எனும் பெண்- 2011,

அழுகிய முதல் துளி- 2015.

மஞ்சள் முத்தம்- 2015,

காடறியாது பூக்கும் மலர்- 2017,

ரோஸ்லின் படைப்புலகம் (2017),

பயணத்தின் மொழி (2020)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website