cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

அதாகப்பட்டது…


அவன் பேசவில்லை.
பாடுகிறான்…
இவன் கேட்கவில்லை.
ஓடுகிறான்…
பாடல் பாதங்களை ஈர்க்கிறது.
இவன் பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறான்.
அவன் மாமலை தவிடுபொடியாகப் பாடுகிறான்.
வெகுநேரம் ஓடியும் பாடல் நிற்கவில்லை.
மலையும் உடையவில்லை.
பாட்டுக்காரனும் ஓட்டக்காரனும் கைகுலுக்கி…
ஒப்பந்தமிடுகின்றனர்.
மலையை மயிரால் கட்டியிழுப்போம் என.
மலையுச்சியை மயிரால் கட்ட ஒரு மரமேறியை அழைக்க…
கூலியாக பாயசம் கேட்கிறான்.
கதை முடிவில்…
மரமேறி பாயசத்தை வழித்து நக்கிக்கொண்டிருக்கிறான்.
பாட்டுக்காரன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறான்.
ஓட்டக்காரன் சிம்மாசனத்தில் காலாட்டிக்கொண்டிருக்கிறான்.


 

About the author

யாழினி ஸ்ரீ

யாழினி ஸ்ரீ

கோத்தகிரியில் பிறந்த யாழினிஸ்ரீயின் இயற்பெயர் யோகேஷ்வரி; தற்போது மேட்டுப்பாளையம் அருகிலிருக்கும் தென் திருப்பதியில் வசிக்கிறார். தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெற்ற யாழினிஸ்ரீ தன் அயராத முயற்சியில் கவிதைகள் எழுத பழகிக்கொண்டவர்.
”எனது கவிதை உலகம் இந்த பிரபஞ்சம்தான். இந்த பிரபஞ்சத்தில் இருந்த, இருக்கும், இருக்கபோகும் அனைத்தும் என் எழுத்துகளுக்கானதே... உடலுக்குதான் நோய்மையே தவிர என் சிந்தனைகள் ஆரோக்கியமானது. அதை முடக்கிவிடமாட்டேன். கை வலித்தாலும் எழுதிவிடுவேன். அல்லது தட்டச்சு செய்வேன்.” என ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்; Oct 22- 2019)

திருப்பூரில் உள்ள பொன்னுலகம் பதிப்பகம் மூலமாக 2019ல் யாழினிஸ்ரீயின் கவிதைகள் தொகுக்கப்பட்டு ”மரப்பாச்சியின் கனவுகள்” கவிதைத் தொகுப்பை கவிஞர் குட்டிரேவதி வெளியிட்டார். அதனை தொடர்ந்து வெளிச்சப்பூ, தீண்டாக்கனி, ஐஸ்க்ரீம் அருவி ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியானது. யாழினிஸ்ரீயின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு நூல் “எழுத்துமி” அக்டோபர் 8-2023 அன்று வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website