cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்


  • நிலைபேறு சொல்

மனதில் எஞ்சியிருக்கும்
கடைசி சொல்லுக்கு
நீளமான மகிழ்ச்சி ஏதும்
இருக்குமா.

இருக்கும்.

அந்த புத்தகத்தில் வசிக்கும் கரையான்கள்
அதனுள் நிறைந்திருக்கும்
சொற்களை
தின்று வயிறு வளர்த்ததென்று
சொல்லி வைப்போம்.

அதன் ஜீரணக் கழிவை
இப்போது காற்று வான்பரப்பில்
பறக்க விட்டிருக்கிறது
மலக்குடல் வழியாக.

இப்போது
ஈக்களின் போர்கள் நடந்தாகுது,
பூமியில்.

டொப்றுக் எலிகளின் தந்திரத்தை
வென்றது ஈக்களென,
நான் கவிதையை முடிப்பதற்கு முன்,
போதையில் திளைத்திருக்கும் நீங்கள்
அந்த மதுக் குவளையிலிருந்து
வெளியேறுங்கள்.


  • மீன் பாடி

உறக்கத்திற்கு காத்திருக்கிறது
ஒரு பூனை போல
அது சுருண்டு புரளும்
படுக்கை.

நான் வாசித்துக்கொண்டிருக்கும்
அந்த புத்தகத்தில்
அது நீண்ட காலமாக
வசித்து வருகிறது.

மெல்ல மெல்ல
பூனையை வாசித்து
நகர்ந்து வருகிறேன்.

மீன்கள்
அறை முழுதும் நிரம்புகிறது,
எனது வாசிப்பின் நெடியில்.

இப்போது

பூனை உறக்கத்தை விட்டும்
பஞ்சு படுக்கையிலிருந்தும்
கீழுறங்குகிறது.

நான்
வாசிக்கும் புத்தகத்தின் பெயர்
மீன் பாடி.


ஜே.பிரோஸ்கான்

About the author

ஜே.பிரோஸ்கான்

ஜே.பிரோஸ்கான்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website