cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

ஹாஸ்யத்துடன் நகுலனுடன் உரையாடல்.


1.

எடை நிறுத்தப்பட்ட மீன்கள்
என்னையே உற்றுப் பார்க்கின்றன.
மீன் கடையில் அவைகளின் செதில்கள்
கழிவுப் பகுதிகள் நீக்கப்படும் போதும்
அவற்றின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
துண்டுகளாக நறுக்கப்படும் மீன்கள்
குழம்பாகவும் வறுவலாகவும் ஆகிவிடுமென்பது நிச்சயம்.
வீட்டில் கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் வாஸ்து மீன்களுக்கு
எப்படிப் பெயரிடுவதென
சின்னஞ்சிறுமியிடம் கற்றுக் கொள்கிறேன்.

2.

எனது அறைக்குள் அந்நபரின் நிழலும் குரலும் மட்டுமே நுழைந்தன.
நிழலின் பார்வைக்கு எனது உருவம் புலப்படவில்லை.
எனது படுக்கையறை, மேஜை, இருக்கை, கழிவறையென
எல்லா புழங்கு பகுதிகளுக்கும் சென்றது.
பிறகு அந்நிழல் நுழையும் முன்னர்
முகமன் கூறியது போலவே மீண்டும் நன்றி தெரிவித்து
வெளியேறியது.
அன்றைய இரவில் ஹாஸ்யத்துடன் நகுலனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

3.

இளைத்துப் போயிருக்கிறேனா என்ற சந்தேகம் உண்டாயிற்று
அறையிலிருக்கும் எடை பரிசோதனையில்
நிர்வாணமாக நின்றபடி என்னை பரிசோதித்துக் கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் எடையிழக்கிறேன்.
மெலிந்து பின் எழும்புகள் தெரிய
ஒரு பரிதாபத்திற்குரிய நாயைப் போல் இருப்தாக
சுவர் கண்ணாடி பரிகாசம் செய்தது
உடைத்துவிடுவது சித்தமென தரையில் போட்டுடைத்த பின்
எனது நிர்வாணங்கள் வெளிப்பட்டன சில்லு சில்லுகளாய்.

4.

தூக்கத்திற்கு மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன்.
வில்லை அட்டைகளை கைகளில் ஏந்தியபடி
எனது தனிமை அறைக்குத் திரும்புகிறேன்.
ஒரு கவிதை எழுத வேண்டும்.
அது மரணம் பற்றியதாக இருக்க வேண்டும்.
நீங்கள் தூங்கியாக வேண்டுமென வற்புறுத்தப்படும் நாளில்
தூக்கத்திற்கு நிவாரணியாக வில்லைகளில் இருந்து
ஒன்றுக்குப் பல மாத்திரைகளை விழுங்கிச்
சரிந்து கிடப்பேன் சடலத்தைப் போல.
இடையில் நடப்பன எதிர்பாராதவைகளாக இருக்கலாம்.
அல்லது ஒரு நிகழ்வு உன்னதமான மரணத்துடன் முற்றுபெறலாம்.


 

About the author

இலட்சுமண பிரகாசம்

இலட்சுமண பிரகாசம்

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
இராக்கண்ணன்

அருமை அருமை 👏💐💜💜

You cannot copy content of this Website