களைப்புற்று அங்கேயே நின்றுவிட்டது என் பால்யம்.
குறும்பு சேட்டைகளும்
துடுக்கு பேச்சும்
புத்தகமே முதல் காதலென்று வந்த
அந்த குறுகுறு காலங்கள்
ஓடி துரத்தி களைத்து அங்கேயே நிற்கிறது.
முதல் துரோகமும்
முதல் நிராகரிப்பும் போட்டியிட்டு வம்பு செய்த என்னிடம்
முதல் பிரிவு
முதல் இழப்பு தொடர்ந்து கிடக்கும் என்னிடம்
கால நிபந்தனைகளை மட்டுமே ஏற்க பழகிய என்னிடம்
வலிகள் இருந்தபோதும் சிரிக்க மட்டுமே தெரிந்த என்னிடம்
பால்யத்தின் நினைவுகள் யாவும்
தோற்றுப்போய் வெளியேறுகிறது.
நேற்றே திருடிவைத்திருக்கலாம்
கொஞ்சம் விண்மீன்களும்
ஒரு நிலாவும்
மின்மினி பூச்சுகளும்….
கருமேகமூட்டங்கள் சூழ்ந்து கிடக்கிறது
இன்றைய வானம்
மிச்சமிருக்கும் இந்த இரவை நான் என்னதான் செய்வது?