வெகு தொலைவில் தெரியும்
மலையின் சாயல் நீ!
எதிரே வரும் மான்களுக்கு
உன் விழி
அதன் கொம்புகளில் அன்பையும்
யாருமே அறியாத தீரா காதலையும்
மாட்டி விடுகிறேன்.
யானையின் கண்ணில் தெரியும்
பெரும் வனமென நீ நிற்கிறாய்.
என் ஆயுளின் தாகம் தீர்க்கும்
நதி உன் தேசத்திலிருந்து வருகிறது.
காயசண்டிகைகளின் பசிபோக்கும் அட்சயப்பாத்திரம்
உன் கரங்கள்
கோப்பையின் அடியில் தங்கிய கடைசி மதுவின்
அடர்ந்த போதை நீ !
மேய்ப்பனின் குரலை தனித்தறியும்
வெள்ளாடுகளின் வாசம் நீ
உன் காடுகள் எனக்குச் சொந்தம்.
அதனாலே என்னில் வேர் கொண்டு
ஆடுகிறாய்.
நிலம் ஆனந்தம் கொள்ளும் இம்மழை போல் நீயும்
நானும் ஆனந்தம் கொள்ள வேண்டும்.
நினைவுக்குப் பக்கம் நிற்கிறாய்
குளிர் குத்தும் இவ் மழையிரவில்
கட்டிலின் விளிம்பில்
எறும்பென நகர்கிறது நினைவு.
கூர் உச்சிமலையில் வெகு சிரமத்தோடு
தேன் எடுத்தவனின் ஆனந்தம் நம்
கலவியின் சுகமென கைவசப்படுகிறது.
ஒரு போர்வைக்குள் வாழ்ந்த
ஆறுதல்கள் இவ் குளிர் இரவில் மேலும்
ஒரு கம்பளியென என்னைப்போர்த்துகிறது.
மெல்ல மெல்ல எறும்புகள் கட்டிலில் முன்னேறுகிறது
அமைதியிழந்த கடலுக்கு
ஆறுதல் எப்போதும்
கரைதானே..!
இருளடைத்த இவ் மழையிரவின்
இவ் அறையில் ஒரு மின்னல் அடித்து
உன் தாபத்தின் கண்களை வெளிச்சப்படுத்துகிறது.
கடலை ஓடிச் சலிக்கும் நதியென
என் காமத்தைச் சலிக்காதிரு..!