cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

ராஜலெட்சுமி பாண்டியன் கவிதைகள்


மௌன வனம்

பெருங்காடொன்றின்
பாறை இடுக்கில்
உறைந்து கிடந்த
என் மௌனத்தைக்
கொத்திக்கொண்டிருக்கிறது
ஓர் மரங்கொத்தி…

வெற்றிடமாய் இருக்கும்
சொற்பேழைக்குள் சொற்களைச்
சேகரிக்கிறது ஓர் செம்பருந்து…

பொலிவிழந்த வார்த்தைகளுக்கு
வர்ணம் பூசுகிறது
ஓர் பஞ்சவர்ணம்…

முளைத்து மடியும் வார்த்தைகளுக்குத்
தண்ணீர் பாய்ச்சுகிறது
ஓர் மடையான்..

வெளிவராத
வார்த்தைகளை விடுவிக்கப்
போராடுகிறது
ஓர் மீன்கொத்தி…

தணல் பூத்த நெருப்பாய்
குமுறிக் கொண்டிருக்கும்
மௌனச் சுடலையைத் தணித்திட..

சாரல்  மழையாக வேணும்
நீ வருவாயா??
அதில்
என் சொற்களுக்குச் சிறகு முளைத்து
உயிர்த்தெழக்கூடும்..
அப்போது வாசித்துப் பார்…
உனக்கு
என் மௌனம் மந்திரமாகும்
என் மொழி கீர்த்தனையாகும்..!!

வாளா..?? சொல்லா..??

மௌனப் போர்க்களத்தில்
ஒரு புறம் நீ…
மறுபுறம் நான்…
இடையில் பத்ம வியூகம் அமைத்து
நிற்கின்றன சொற்கள்..
மீட்பது யார்?

மௌனமெனும்  கேடயம் நான்
கோபமெனும் வாள் ஏந்தி நீ….
என்னை வீழ்த்தி
என் மௌனம் உடைக்கும்
ஆயுதம்
உன் சொல்லா..? வாளா..?

சொல்லால் வீழ்த்தினால்
கட்டுகிறேன் கப்பம்
என் கவிதைகளால்..!!

வாளால் வீழ்த்தினால்
சூட்டுகிறேன் முள் கிரீடம்
நம் பிரிவின் பரிசாய்.!!

உயிர்பெறும் ஞாபகம்

ஒரு பெரும் மழையை ரசிக்கும்
கண்களில்
ஒரு மாபெரும் இழப்பின் சோகம்
மறைந்திருக்கும்…

பற்றியிருக்கும்
ஒரு தேநீர் கோப்பையில்
நிறைந்திருக்கும் நுரை மொட்டுக்குள்
ஓராயிரம் தித்திக்கும் நிமிடம்
ஒளிந்திருக்கும்..

காற்றில் தவழ்ந்து வரும்
பழையப் பாடலொன்றில்
உறங்கிக் கொண்டிருந்த
கடந்த கால நினைவுப்படிமமொன்றைத்
தட்டி எழுப்பும்…

மழையின் கண்ணீரும்
தேநீரின் தித்திப்பும்
பாடலொன்றின் சோகமும்
ஒரு சன்னலோர பயணமொன்றில்
ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் நாழிகையில்…

இயல்பு மாறிப்போன வாழ்க்கைக்கு
இயல்பாய் உயிர் கொடுத்து விடுகிறது
இயற்கை..!!


About the author

ராஜலெட்சுமி பாண்டியன்

ராஜலெட்சுமி பாண்டியன்

கணித ஆசிரியை ; பெரம்பலூர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website