cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

பாரதி சித்ரா கவிதைகள்


ன் நினைவென்பது
கரிக்கோட்டு சித்திரம்..!
கனவுக்கும்,
கற்பனைக்கும் இடையேயான நிகழ்காலத்தின் தீரா சமர்.
காற்றுக்குதிரையேறிய மனதின் ஓயா சவாரி..!

உன் நினைவென்பது.
கழுத்தை பின்னிய
நச்சரவத்தின் நெடும்பல்..
சுழன்றெரியும் தீயிடை
நிலைத்த வெற்றிடம்..!

உன் நினைவென்பது நாசியில் நிறைந்த காலத்தின் வாசம்…
ரணத்தின் மீதான ஒத்தடத்தின் உயிர்சுகம்..

உன் நினைவென்பது
முற்றி முதிர்ந்த முது தேறலின்
பற்றி எரியும் தீரா கசப்பு
ஆம்.. !
உன் நினைவென்பது
மீளவொண்ணா மாயப்பெரும் போதை..!

தேர்ந்த பரிசகாரனின்
பக்தியோடும் பக்குவத்தோடும் தான்
சமைக்கப்படுகிறது
உனக்கான என் ஒவ்வொரு சொல்லும்.

நிவேதனமாய் நீ இதை ருசிக்கும்
முன் தனக்கென கேட்பவர்களிடம்
படையலுக்கு முந்தி இனிப்பை
உண்ண விழையும் குழந்தைகளின் சாயல்..!

ன்பை சுமந்துவரும் என் மொழிகள்
பிறர் அறியாவண்ணம் உனக்கு கடத்துவது…

பெருவிருந்தாயினும் பிடித்த நல்லிக்கறியை வாறி எடுத்து
கணவனுக்கு பரிமாறும் மனைவியின் காதல்…

தனக்கு கிடைத்த பண்டத்தை பேரன் / பேத்திக்கு
என பத்திரப்படுத்தும் கிழவியின் வாஞ்சை…

பாதியை மட்டும் கரந்தாலும் கன்றுக்கு என
மடிசுருக்கிக்கொள்ளும் பசுவின் தாய்மை..

கூரிய பற்களிடையே காயம்படாமல் குட்டியை
கவ்வித்திரியும் நாயின் ஜாக்கிரதை உணர்வு…

நெருக்கிக் கட்டிய மல்லிச்சரத்தை
நறுக்கித்தரும் தோழியின் சிநேகம்…

ஆடும் மயிலின் தோகையென சிலிர்த்தபடி விரியும் மோகம்…!

எனக்கு நானே மிச்சமில்லாத உனக்கான படையல்..!!!


– பாரதி சித்ரா

About the author

பாரதி சித்ரா

பாரதி சித்ரா

கோவையைச் சார்ந்த பாரதி சித்ராவின் இயற்பெயர் சித்ரா, தீவிர இலக்கிய வாசிப்பாளரான இவர் கல்கி, கோவை ஹெரால்ட் போன்ற இதழ்களில் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உடையவராக உள்ளார். இவரின் கவிதைகள் நுட்பம் - கவிதை இணைய இதழில் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
Mahesh

அழகு அத்தனையும்

நேர்த்தியான கவிப்பு..

You cannot copy content of this Website