cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

சாய்வைஷ்ணவியின் இரண்டு கவிதைகள்


அவனை என் வீட்டுக்கு அழைத்தபோது
உலகம் தலைகீழாக விடியத் தொடங்கி இருந்தது
சூரியன் திசை மாறி காணாமல் போனது
தேடிப்பறந்த பறவைகள் கானகத்தை இழுத்துப்போயின
மனிதர்கள் எல்லாம் தலைகீழாக நடந்துக்கொண்டிருந்தனர்
காமம் முற்றிப்போன விலங்குகள்
இருள் அதிகரிக்க வேண்டி குருகிநின்றன
அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் வழியில்
நிலவு பாதை தொலைத்து நின்றது
தேடி அழைந்த நட்சத்திரங்கள்
கூட்டமாக என் வீதியில் உலாவுதை
கதிரவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது
அவன் வீட்டுக்குள் வந்துவிட்ட போது
அப்பா மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு
ஏறிக்கொண்டிருந்தார்
அவர் கைகளில் ஜவ்வாது வாசனை நிறைந்திருந்தது
அம்மா நிலை வாசலின் கோலத்தை
அழித்துக் கொண்டிருந்தாள்
அது வீதியெங்கும் தெறித்து விழுந்து எழுந்தோடியது
அவன் என் படுக்கை அறையை எட்டி பார்த்தப்போது
என் படுக்கையில் நான் உறங்கிக்கொண்டிருந்தேன்
எப்போதும் போலவே அவன் என் நெற்றியில்
ஒரு சிறு முத்தமிட்டான்
நான் விழித்துக்கொண்டேன்
இன்றும் நான் மட்டும் தலைகீழாக விடிகிறேன்.

பால் மணத்தின் புடைப்போடு நிம்மதியின் உச்சியில்
உறங்கிக்கொண்டிருக்கிறது குழந்தைகளின் இரவு
உறக்கம் பிடிக்காத தகப்பனின் மனமொரு
விடமற்ற சர்ப்பம் போல சத்தமிட்டு
நாற்புறமும் புரண்டு புரண்டு விழிக்கிறது
ஒன்று இரண்டு மூன்றை
தலைகீழாக எண்ணுவதில் தொடங்கி
லட்சத்தி சொட்சம் வந்தபோது தெருவில்
நடுசாம நாய்கள் குறைத்துக்கொண்டிருந்தன
எண்கள் விட்டுப்போகும் தடங்களை எல்லாம்
எண்ணங்கள் ஆக்கிரமித்துக் கொள்வது இயல்பானது
இமைகளை கண்கள் கொண்டு
மூடுவதைப் போல அவ்வளவு எளிதானதல்ல
அவமானத்தை பொறுத்துக் கொண்டவனின் இரவு
காய்ச்சிப்போன விரலிடையைப் பற்றிக்கொண்டு
ஆறுதல் பேசுகின்றன நண்பனிடம்
கடன் வாங்கிய மலபார் பீடிகள்.


 

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments

வார்த்தைகளும் அர்த்தமும் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழுத்தத்தை கொடுத்து அனுப்புகிறது…. இன்னும் எழுதுங்கள் கவிஞரே…..

பிரபா

நல்லா எழுதுறீங்க வைசு. உங்க புக் படிச்சி இருக்கேன். இன்னொரு poetry collection கொண்டு வாங்க

You cannot copy content of this Website