கைவிடப்பட்ட ஆட்டுரலின் குழியில்
தேங்கி நிற்கும் மழை நீரென
தேங்கி கிடக்கும்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
பிரியத்தைப் பார்க்கிறேன்
மழை இல்லைதான் காட்டு வெள்ளாமைக்கும்
வயிற்றில் ஈரத்துணிக் கட்டி காடுவெட்டியவனுக்குமே
வெம்மை என்னவென்று தெரிகிறது
ஒரு நொடி மின்னலென
ஒரு சூனியக்காரியின் பயமுறுத்தலென
மேகத்தை துடைத்து விட்ட வானம்
வெளிறிக்கிடக்கிறது
நீ
மழை
பருவம் தவறாதிருக்கட்டும்.