1.
நிசப்தம் போர்த்திய
நள்ளிரவொன்றில்
சலம்பும்
நினைவடுக்குகள்
நித்திரைக்குள்ளும்
நிச்சலனமாய்
இருக்க விடுவதில்லலை.
பொழுதெல்லாம்
ஆகாயம் முழுக்கத்
துடைத்துத் தன்
தீந்தைகளால் வரைந்த
வானத்தை
மெல்ல விசிறிவிடும்
பறவைகளேதுமில்லை
இக்கணம்.
கனிந்துதிரக்
காத்திருக்கும்
நட்சத்திரங்களின்
தடமொற்றி நகரும்
முகில்களுக்கிடையிலாவது
ஒளித்து வைத்திருக்கலாம்.
இடம் பெயர்ந்துவிட்ட
இதயத்தை
இப்போது எங்கே தேடிப் பிடிப்பது?
2.
எங்கோ சேகரித்த
சொற்களை
நினைவுகளுடன்
படரவிட்டு பின்னலாக்குகிறது
பாண்டி ஆட்டமென
கட்டத்தில்
அங்குமிங்குமாகத்
தவ்விக் குதிக்கிறது.
இழுத்துப் பிடித்து
இணைக்கப் பார்க்கிறேன்.
இன்னும் இன்னுமென
முடிவுறா வேட்கையொன்றின்
நீட்சியாய்…
இயல்பற்று அறுந்துபோகிறது.
இத்தனைக்கும் பிறகு
இனி நான் எதை எழுத?
குறைப் பிரசவக்
குவியல்களுக்கிடையில்
மெலிதாய்க் கேட்கிறது
லப்..டப்.
அருமை