எல்லைகள்
எனக்கான எல்லைகளை
நீ வகுத்து
பாதை சமைக்கிறாய்
அச்சாலை செல்லவேண்டிய
தூரத்திற்கு என்னை இட்டுச்செல்லவில்லை
பாதுகாப்பென ஊர் எல்லையோடு முடிவுருகிறது
நிலமெங்கும் மதில் உயர்த்தி
மூன்று வேளை உணவை பரிசளிக்கிறாய்
தேவை அறியாது
சோற்றுப்பருக்கைகளோடு
தீர்ந்துவிடுவதில்லை என்வாழ்வு
அவ்வப்போது தாழ்நீக்கி
புத்தாடை ஆபரணங்களோடு
வீதியுலா வரப்பணிக்கிறாய்
அவலட்சணத்தில் சுருங்கிப்போகும்
என்மனதை காண
அவகாசமிருக்காது உனக்கு
விதிகளில் புதைந்து கொள்ளும்
முகமல்ல என்னுடையது
எத்தனை வலிமைக்கொண்டும்
வானத்தை உன்னால் மூடிவிட முடியாது.
நகரும் காலம்
நொடிகளால் நிரம்பும் பொழுதென
அறிவாய் நீ
தீர்ந்துபோகும் முன்
இந்த அணைப்பைத் துளியும் தளர்த்திவிடாதே
நீ இல்லாத பொழுதில்
கர்வம் மிக வேகமாய் அதன் உச்சம் தொடுகிறது
உன் விழியால் அதையும் நலம்கேள்
அணைத்துக்கொண்டே
உச்சி மோதும் என் மூச்சுக்காற்றுக்கு
ஆயுள் நீளும் அதிசயத்தை
நீ நீங்கியபின் சொல்லில் சிறைபிடிக்க முடியாத வறுமை கண்டு புன்னகைப்பாய்
விரல்களை விரல்களோடு சேரவிடு
நகரும் காலத்தை முடிந்த மட்டும் உறைய வைப்போம்
விடைபெறும் முன் திரும்பி பார்த்துவிடாதே
திசைகள் சூன்யமாவதை என்னால் ஜீரணிக்க முடியாது.
வலி
நான் கோராத பொழுதில்
எதன்பொருட்டும் தீர்ந்துவிடாத
ஒன்றைத்தான்
நேசமென அள்ளி தந்தாய்
கைகள் வழிய வழிய
எதிர்பாராத நொடியில்
பிடிங்கிக்கொள்கிறாய்
உன்னுடையதென
குறைப்பிரசவத்தில்
இறந்து பிறந்த
சிசுவைக்கழுவி முடித்து
கருவுற்ற வயிற்றை
தடவிப்பார்க்கும் தீரா வலி
அகமும் புறமும் ஒரு சேர
யாழினி