பிரியா இதழ்களில்
சொற்கள் உடைந்து கசிய,
கண்கள் சுருக்கி
“மாமனுக்கு ஒரு முத்தங்குடு”
என அவன் கேட்கும் அக்கணம்
தரப்படும் முத்தம்
ரங்க ராட்டிணத்தில் ஏற்றி
சூரியனை
சுற்றவைக்க வல்லது.
முத்தத்தின் நிறம்
அதரம் பற்றி
வீறுடை வாளேந்தி உள் நுழைந்தவன்
பருகிய முதல் துளியை அமிழ்தம் என்கிறான்.
சுவைத்த கணத்தில் உள்ளிழுத்துக் கொல்லும்
அது நஞ்சென்கிறேன் நான்.
உன் ஒரு துளி அமிழ்தம் பருகி
முடிக்கவியலா நீலாழி என்கிறான்.
நஞ்சின் நிறமும் நீலம் என்கிறேன் நான்.
சுவைக்கு நிறமுண்டா என்கிறான்.
உன் முத்தத்திற்கு நஞ்சின் நிறம் என்கிறேன் நான்.
அமிழ்தத்தின் சுவை எது என்கிறான்.
அமிழ்தத்தின் சுவை
நஞ்சின் சுவை
கடலின் சுவை
நீலத்தின் சுவை
காதலின் சுவை
உன் முத்தத்தின்
துவர்ப்பு என்கிறேன் நான்.
அன்றொரு நாள்
அவ்வெண்ணிலவின்
பொன்னொளியில்
காதலின் ஆதித்தாய்
நாகத்தின் மோகக்கனியை
அவனுக்கு கொடுத்தாள்.
கனியுண்டவன் புதுமோகம்
துளிர்த்து காதலில்
இட்ட தீரா முத்தங்களை
எல்லாம் அள்ளி அவள்
அவ்வெண்மதியில்
ஒளித்து வைத்தாள்.
தகிக்கும் சித்திரையிலும்
முழுமதி குளிர்மதியாய்
பொழிவதெல்லாம்,
யுகம் யுகமாய்
இப்புவியில் தோன்றும்
காதலிகள் தங்கள்
ஆதித்தாய் வழிபற்றி
முழுமதியில் சேமிக்கும்
தங்கள் உயிர்கொள்ளா
முத்தங்கள்தாம்.
உன் கரம்பற்றி
படர்ந்த காதல் கொடி
உயிர்த்திரட்டி
இன்று
முத்தமாய்
பூத்திருக்கிறாள்.
காதலை சொற்களுக்குள்ளும்
சொற்களை மௌனத்தினுள்ளும்
ஒளித்து வைக்கிறேன்.
ஒவ்வொருமுறை
முத்தத்தின்போதும்
என் மௌனத்தை
களவாடிச் செல்கிறாய்.
உன் மார்பின்மீது
கூந்தல் பரப்பி
தோள் சாய்ந்து
கேட்ட இசையில்
மோகம் துளிர்த்து
கோர்த்திருந்த விரல்களில்
முதல் மென்முத்தமிட்ட
மகிழ்பொழுதிற்காகவேனும்
வா,
மீண்டும் முதலிலிருந்து
காதலிப்போம்.
இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.