1.
வாலிபத்தை கொன்றழித்து
நேசத்தை, சாதி நெருப்பில்
பொசுக்கியபின்
தனித்தனிப்பாதைகளில் பிரிக்கப்பட்டோம்.
காலம் உன்னை எங்கோ தள்ளிவிட
வேலையின் குழிகளில்
நானும் தள்ளாட
வருடங்கள் கடந்தபின்
அவரவர் மனங்களில்
அணைக்காமல்
எரிந்த காதலை
உன் மகனுக்கு என் பெயரையும்
என் மகளுக்கு உன் பெயரையும்
வைத்தபடி போற்றுகிறோம் என்பதை நேற்றைய திருவிழாதானே
காட்டிக் கொடுத்தது
நமது இணையர்களுக்கு.
2.
கூடுடைந்த பறவை போல
சொற்களைத் தேடுகிறேன்
வாழ்க்கையைக் கட்டமைக்க.
காற்றில் மிதக்கும் இறகென
வெட்டவெளியில் அலைகின்றன இரைச்சல் சொற்கள்.
சூரியக்கதிர்கள்
சுட்டெரித்தபின்
வார்த்தை வீட்டைக்
கட்டுவது எப்படி.
அவதியுறும் சொற்களை
ஆரத்தழுவியபடி
மௌனப் போர்வைக்குள்
மனம் புதைக்கிறேன்
மகிழ்ச்சியாய் யாவரும்.
3.
தலைகளை எண்ணிடாமல்
மனங்களின் தின வறுமையை எண்ணியபடி
ஊருக்கே சோறு போட்ட
வயலில் விதைத்தபடியே
புதையுண்டு போனான் என் பாட்டன்.
கை நிறையக் காசு தரும்
வேலைக்குப் போவேன் என
வயலை விற்று
படிப்பிற்காக என்னை வழி அனுப்பி
வயிற்றைக் காயப் போட்ட
என் தகப்பன்
உத்திரத்தில் தூக்கிட்டுச்
செத்துப் போனான்
வாங்கிய கடனை கட்ட முடியாமல்.
தெருவெங்கும் புழுதி பறக்கத்
திரிந்த பொழுதுகளை நினைத்தபடியே ஆடி
மகிழுந்தில்
பாட்டனின் வயலைக் குடித்து
முளைத்து நிற்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கிறேன்
வங்கிக் கடனுக்கு
வட்டி கட்டாத
விவசாயிகளைத் தேடி மேலாளராக.