புணரும் யானையின் கைபோல்
வளைந்து விளையும் தினைக்கதிரை
தின்ன வரும் செந்தார் கிளிகளை
நீயும் நானும் சேர்ந்து தானே
அன்று விரட்டினோம்.
கிளிகள் வராத நாட்களில்
காக்காய்ப் பொன்னால் கண்ணெழுதி
மாதுளம் பூவால் மூக்கெழுதி
மரவல்லி இலையால் உடலெழுதி
நந்தியாவட்டை மற்றும்
பனையோலை இலையால் சிறகெழுதி
வெள்ளை அரளி மற்றும்
செவ்வரளி மொட்டுகளால் வாலெழுதி
உனக்கு நான் தானே
பொய்க்கிளி செய்து கொடுத்தேன்.
பிள்ளையைத்
தோள் மாற்றுவது போலத் தான்
நீ கிள்ளையைத்
தோள் மாற்றுகிறாய்.
ஒரு போதும் மாற்றிவிடாதே
ஆண்டாளின்
இடது மென்றோளில் இருக்கும் கிளியை
மீனாட்சியின்
வலது தடந்தோளுக்கு
ஆண்டாளின் கிளி
சுகப்பிரம்மம்
மீனாட்சியின் கிளி
பரம்பிரம்மம்.
உன் கைக்கிளையைக்
கொழுங்கொம்பாக பற்றும்
அந்தப் பவளச் செவ்வாய் கிளி
என் கைக்கிளைக்கும்
தூது செல்லுமா?
தூது சென்று
கைக்கிளையை
இருதலைக் காதலாக்குமா?
நீ என்னோடு
பேசாதா நாட்களில்
உன் கிளியையாவது
என்னோடு பேசச் சொல் !
கோலக் கிளி மொழி
குத்தல் எடுத்தாலும்
உமி விலகி
அரிசி தெரிகிறதா என்று பார்ப்போம்.
இலக்கியத்தில் எது பிடிக்கும்
என்று கேட்டால்
இப்போதெல்லாம்
ஐங்குறுநூற்றில் வரும்
கிள்ளைப் பத்து
என்று தான் சொல்கிறேன்.
நிறங்களில் கூட
இப்போது
கிளிப்பச்சை தான் மிகவும் பிடிக்கிறது.
மாங்காயில் கூட
கிளிமூக்கு தான்
நிரம்பப் புளிக்கிறது.
இப்போதெல்லாம்
எந்தக் கிளி ஜோசியக்காரனைக் கண்டாலும்
ஜோசியம் பார்க்கிறேன்.
சீட்டெடுக்கும் கொஞ்ச நேரமாவது
அதற்கு விடுதலை கிடைக்கட்டும் என்று.
குரல் : சுபா யோகா
இந்தக் கவிதைகளை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்.
Art Courtesy : Hitesh Durgani