- என் தனிமை
என் தனிமையைக்
கடந்தேகுகின்றன மேகத்திரள்கள்
மிக அலட்சியமாய்.. மிக மிகவும்…
கண்டும் காணாமல் நகர்கிறேன்
என் தனிமை கண்டு
கை கொட்டி நகைக்கும் நட்சத்திரங்களை…
கையாலாகாதவனாய்…
என் தனிமையின் மீது
பொழியும் மழை
வாஞ்சையா…வன்மமா?
அடர் ஆரண்ய வழிப் பயணத்தில்
இணையாக வருகிறது தேயா மதி..
துணையாய்த் துளியொளி!
உணர்கிறேன்…
வலுவானதென் தனிமை.
வேரும் விழுதுமாய் காலம் தின்று செரித்த தருவென..
- இன்மை வழியும் சூன்யச்சுழியம்
சலனமின்மை எனவும் அழைக்கிறாய் நிர்ச்சலனத்தை
பெருங்கூட்டமெங்கும் உயிர்த்திரள்
நிகழவில்லை எந்த அற்புதமும்
மின் ரயில்களில் தொங்கிச்செல்லும் மனுஷ எந்திரங்கள்
பேருந்து புகையோடு பேரொலி
சிந்திக் கிடக்கிறது நெடுஞ்சாலையில்
விமான இருக்கைகள் நிரம்பி நகர்கிறது ரன்வேயில்
பங்குத்தானி.. மெட்ரோ ரயில்
எங்கும் கூட்டம்
பயனென்ன… நிர்ச்சலனம்…!
கால்நடை மந்தை
பட்சிகளின் பிறைநிலா வலசை
எறும்பினத்தின் பெருங்கோட்டு வரிசை
பெருகும் அமீபாக்கள் யாவும் நகைக்கின்றன
நிர்ச்சலனம் எங்கும் எப்போதும்
எதிலும் யாவையிலும்
இன்மை வழியும் சூன்யச்சுழியம்
மவுனமாய் மலர்ந்து புன்னகைக்குமொருப் பூ.