மலையின் குளிர் நிழலென மூங்கிலின்
விரி தோள்களைக் கொண்ட தலைவனோடு,
தோகையின் மின்னிடும் கண்களாய்ச் சுடரும்
காந்தளின் இதழ் சூடி,
அன்புடைய
நெஞ்சம் போல
நாளும் மகிழ்ந்திருக்கும்…
மெல்லியவள் அவள்
அவன் மன அகழியின் அகலம்
இந்த அகிலத்தை விடப்பெரிதென்று யாவர்க்கும் தெரிந்த போதும்
கொதித்தெழும் அடலையின்
நிலைக்களத்தை
விரிந்த விழிகளோடு காணும் கொடிச்சியின்
மனத்தவிப்பு
அடவியில் ஓர் ஆலாபனை
ஆதாரமற்ற சொற்களின் கடினம்
மணற் துகள்களாய்,
பாதத்தில்
கொடும் வெய்யில் எனப் படரும்,
தனிமையின் இறுதி சாளரத்தை
தணல் கொண்டு அடைக்கிறாள்
தொடரும் அன்பிலியின்
அசைவு,
ஓர் பேரொலி
மற்றும் அவள்
உயிர் கொல்லா பெருவலி
என்பது அவள் அறிந்தது தான்
இருள் அகற்றும் அநிதத்தின் ஆலாபனையில்
மலரைப் போல இதழ் விரிக்கிறது
யாழின் இசை…
கவிதை வாசித்த குரல் : சிவநித்ய ஸ்ரீ
இந்த கவிதையை Spotify App -லும் கேட்கலாம்.