- பிரியாத வரம் வேண்டும்
காடு மேடு சுற்றி
கல் முள் பாய்ந்தாலும்
அன்றில் பறவைகளாய் வாசலோடு தங்கி
இன்றும் உடன்கட்டையேறும் காலணிகளாகவும்.
கனமழையின் கச்சேரியில்
நத்தைக்கூட்டில் ஒட்டிக்கொள்ளும்
சின்னஞ்சிறு இலையைச்
சுமந்து செல்லும் நத்தையாகவும்.
சூட்டின் தீவிரம் தெரிந்தும்
பாலில் மோகம் கொண்ட
திருட்டுப் பூனைக் குட்டியாகவும்.
ஒரேயொரு வரம் கிடைத்தால் போதும்
கானல் நீராய்ப் போகும் உறவுகளுக்கு மத்தியில்!
- தீண்டும் இன்பம்
பற்பல பக்க எண்ணில் தீண்டியவை
மனத் திரையில் விரிக்கிறதொரு காட்சியை
அதுவே என் தனிமைக்குத் துணையாவதோடு
மெய் மறக்கவும் செய்கிறது
எங்கோவொரு மரத்தடியிலிருந்து நீ எழுதியதை
தாளிப்புத் தாளம் போட
என் அடுப்படியிலிருந்தே வாசிக்கிறேன்
சர்க்கரைக் கட்டியென
எழுத்துக்களைச் சிதறவிடுகிறாய்
இன்பமாய் அதனைத் தீண்டி
புத்தகமெனும் புற்றிற்குள்
அடையும் எறும்பாகிப் போகிறேன்
நீயோ திசையறியாப் பறவையாய்ப் பறக்கிறாய்
என்னைப் போன்ற வாசகருக்கான
அடுத்த புற்றை உருவாக்க!
- வெற்றிடம்
தலைவியைப் பிரிந்த தலைவன்
மிக நீண்டதொரு நாளையே
சதுரமாய், செவ்வகமாய் மடித்துத்
துண்டுச் சீட்டாக்கி
சட்டைப் பையில் வைக்கத் தெரிந்த
கெட்டிக்காரன் தானென்றாலும்
உறங்கும் நேரம் வந்துவிட்டால்
தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கும்
பரந்து விரிந்த மீதி மெத்தையின்
பார்வையிலிருந்து தப்பித்துத்
தலைமறைவாகும்
மிகப் பெரிய திருடனாகிவிடுவான்!
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.