cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்


  • பிரியாத வரம் வேண்டும்

காடு மேடு சுற்றி
கல் முள் பாய்ந்தாலும்
அன்றில் பறவைகளாய் வாசலோடு தங்கி
இன்றும் உடன்கட்டையேறும் காலணிகளாகவும்.

கனமழையின் கச்சேரியில்
நத்தைக்கூட்டில் ஒட்டிக்கொள்ளும்
சின்னஞ்சிறு இலையைச்
சுமந்து செல்லும் நத்தையாகவும்.

சூட்டின் தீவிரம் தெரிந்தும்
பாலில் மோகம் கொண்ட
திருட்டுப் பூனைக் குட்டியாகவும்.
ஒரேயொரு வரம் கிடைத்தால் போதும்
கானல் நீராய்ப் போகும் உறவுகளுக்கு மத்தியில்!


  • தீண்டும் இன்பம்

பற்பல பக்க எண்ணில் தீண்டியவை
மனத் திரையில் விரிக்கிறதொரு காட்சியை

அதுவே என் தனிமைக்குத் துணையாவதோடு
மெய் மறக்கவும் செய்கிறது
எங்கோவொரு மரத்தடியிலிருந்து நீ எழுதியதை
தாளிப்புத் தாளம் போட
என் அடுப்படியிலிருந்தே வாசிக்கிறேன்

சர்க்கரைக் கட்டியென
எழுத்துக்களைச் சிதறவிடுகிறாய்
இன்பமாய் அதனைத் தீண்டி
புத்தகமெனும் புற்றிற்குள்
அடையும் எறும்பாகிப் போகிறேன்

நீயோ திசையறியாப் பறவையாய்ப் பறக்கிறாய்
என்னைப் போன்ற வாசகருக்கான
அடுத்த புற்றை உருவாக்க!


  • வெற்றிடம்

தலைவியைப் பிரிந்த தலைவன்
மிக நீண்டதொரு நாளையே
சதுரமாய், செவ்வகமாய் மடித்துத்
துண்டுச் சீட்டாக்கி
சட்டைப் பையில் வைக்கத் தெரிந்த
கெட்டிக்காரன் தானென்றாலும்
உறங்கும் நேரம் வந்துவிட்டால்
தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கும்
பரந்து விரிந்த மீதி மெத்தையின்
பார்வையிலிருந்து தப்பித்துத்
தலைமறைவாகும்
மிகப் பெரிய திருடனாகிவிடுவான்!


 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

தேன்மொழி அசோக்

தேன்மொழி அசோக்

தேன்மொழி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு,மக்கள் மனம்,மின்கிறுக்கல் மின்னிதழ் மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும்,தமிழ் நாட்டின் வாசகசாலை இணைய இதழ் மற்றும் வளரி மாத இதழிலும் வெளியாகியிருக்கின்றன.கவிதைகளை வாசித்துக் குரல் பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சிங்கப்பூரின் ஒலி 96.8ல் இவரது கவிதை வாசிப்பு ஒலித்திருக்கிறது. சிங்கப்பூரின் தங்கமுனைப் போட்டியில் (2023) இவரின் கவிதைகள் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது.

இவரது கவிதை வாசிப்பினைக் கேட்க https://youtube.com/@user-mv9zg9ry6u .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website