பொத்தி வைத்த மாயக்குவளைகளை
உடைத்தெறியுது வானம்.
தலைகவிழ்த்த ஒளிக்குமிழியின்
முன்றிலில் துள்ளும்
பெதும்பை மழை.
ஈரம் தோய்ந்த நகரத்தின்
நிச்சலனம்.
காற்றும் , கூதலும்
கத்தை கத்தையாய்
குடையும் நினைவுகளும்.
சில நகரங்களுக்கும்
உணர்வுகளின் நாளங்கள்
இருப்பதை உணர்கிறேன்.
பாதி கடந்த இரவுகளில்
சட சடக்கும் மழைத்திவலை,
சர்வமும் சுருட்டிக்கொண்ட
நகரத்தின்,இரவுப் பாட்டாய்
அழக் கூடச் செய்கிறது.
நல்ல நிலா நாள்:
கப்பிக்கிணற்றோடு சாய்ந்த
தென்னை.
கீற்றுகளூடும் வெளிச்சம்
சொட்டச் சொட்ட,
விழித்துக் கிடக்கும் கொல்லைத் தரை.
இப்போது எப்படி இருக்கும்?
மனது ,
கோட்டானாய் கூவித்திரிகிறது.
கூரை ஓடுகள் தடத் தடக்க
கொட்டித் தீர்த்த நாளொன்றில்,
பலமுறை வாசித்த,
பச்சை அட்டைப் புத்தகமும்
பழுப்பு நிறப் பக்கங்களும்.
காணாமல் போன இடம் தேடி ,
கனவெல்லாம் அலைகிறேன்.
சந்தடி தூங்கிய வயல்.
வடியும் வாய்க்கால்.
வாய் ஓயாத தவளைகள்.
மழை இருட்டு போர்த்திய ஊர்.
சில்வண்டுச் சத்தம்.
இவை சேர்ந்த பொழுதொன்றில்
இசைத்த வானொலி.
முதல் வரி மறந்தும் -இன்னும்
முடியாமல் கேட்கிறது.