அளவுகோல் இல்லையென்றாலும்
என் பிள்ளையிடம் வேண்டுமென்றே கேட்கிறேன்.
“அம்மாவை எவ்வளவு பிடிக்கும்?”
இந்த வீடளவு என்கிறாள்.
வீட்டை விட ஊர் பெரியது என்றேன்.
பின் ஊரளவு என்கிறாள்.
தாத்தாவிடம் கேட்கிறாள்,
ஊரை விடப் பெரியது
பின் பெரியதை விடப் பெரியது
எது என்று.
இறுதியாக விண்வெளி தான்
என்று ஒப்புக்கொண்டு,
“விண்வெளியளவு” என்று
கை விரித்துக் காட்டுகிறாள்!
இப்போது,
அவளன்பின் கைக்குள்
அடைபட்டிருக்கிறது
விண்வெளி!
எல்லோர் வீட்டிலும்
கட்டாயமாக அல்லது கட்டாயமாக்கிய
ஒரு பழக்கத்தை வைத்துள்ளார்கள்.
அம்மாவுக்கு,
அரிசி வாங்கிப் பொட்டியில்
தட்டும் போது “அட்சயம்” சொல்ல
யார் சொல்லிக் கொடுத்தார்கள்
என்று தெரியவில்லை.
இப்படிக் “கடவுளை”
எழுந்து வரச் செய்யவும்
ஒரு வார்த்தை கொண்டு
கட்டாயப்படுத்துங்களேன்.
என்றேனும்
ஒருநாள்
வீதி செல்கையில்
உன் கண் கோர்த்து
உன்னைச் சுவாசித்தவள்
“நான் தான்”
என்று விலாசம் சொல்ல
இன்னும் பக்குவப்படவில்லை
நான்!
கவிதைகள் வாசித்தவர் : ஷீபா
Listen On Spotify