உரையாடல் திருவிழாவில்
திளைத்திருக்கும் போது
காரணமற்ற மௌனத்தை முகத்தில் அறைந்து விட்டு
சட்டென மாயமாகி விடுகிறாய்.
ஓலமிட்டு
உன்னை அழைக்கும்
என்
இயலாமையின் குரல்கள் பிரகாரச் சுவர்களில்
மோதி மோதி
ரணமாகின்றன.
திக்குகளற்று
பெய்து ஓய்ந்த
நம் உரையாடலின்
பேய் மழையில்
எந்தச் சொல்லில்
நீ இடறி இருப்பாய்?
எந்த மௌனத்தில்
நான்
நிலை குலைந்தேன்?
தேடித் தேடி அலைவுற்றுத்
தவிக்கிறேன் எனக்குள்.
உன் மடி தழுவி
அரங்கேற வேண்டிய
என்
நேசத்தின் கீர்த்தனைகள் துயருற்று நிற்கின்றன
என் நெடுந்தனிமையில்.
மறைந்தது போன்ற
மாயம் போலவே
சட்டென திரும்பி வந்து
புன்னகைத்து நிற்பாய்
நடந்து முடிந்த
யுத்தத்தின் சுவடுகளற்ற அமைதியில்
இமைகளில்
வெட்கம் பூசிய
பிரியத்தின்
மெல்லிய ரீங்காரம்
ஒலிக்க.
உன் முகம் பார்த்ததும்
பாடத் தொடங்கும்
என் இதழ்களை
இரக்கமின்றித்
தடுத்தாட் கொள்வாய்
தாகித்த இதழ்களால்.
முத்தங்களின் ஆலாபனை
மென்மையாய்
தொடங்கும்.
உன்
பிடிவாத மௌனங்களும்
என்
பித்தேறிய சொற்களும் அப்போது
ரசித்து ரசித்து
வேடிக்கை பார்க்கும்
ஆயிரம் வீணைகள்
ஆயிரம் பறைகள்
இயைந்திசைக்கும்
அதிர்ந்தொலிக்கும்
நம்
இதழ்களின்
சங்கீதத்தை!