cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


  • மேலும் அங்கு யாரும் கிடையாது

சும்மா ஒரு பகலின் கைப்பிடியில்
இந்த அறை இருக்கிறது
வெளிச்சத்தை அனுமதிக்கும் வழக்கமில்லை
நிழலின் பாவனைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன

சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மௌனத்தை
அப்புறப்படுத்தும் சுவாரஸ்யம் அற்று
எழுதுவது நின்றுவிட்டிருக்கிறது

இந்தக் காட்சியின் அவலத்தை
எவரேனும்
சாவி துவாரங்களின் வழியே வேடிக்கைப் பார்ப்பதை
வெறுக்கிறேன்

ஒரு லிஃப்டுக்காக நீங்கள் காத்திருக்கும் வேளையில்
இந்தப் பக்கம் நோட்டம் விட
ஒன்றுமில்லை

தரையிலிருந்து உயர்ந்து திரும்பிவரும்வரை
உங்கள் பகலின் கைப்பிடியில் நீங்கள் ஏன் இல்லை
என்கிற கேள்வியை
தன் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கும்
உங்கள் அறை


  • தொலைவில் ஒரு காடு உண்டு

நாளையை இட்டு நிரப்பிக்கொள்ள
ஓங்கி வீசிக்கொண்டிருக்கிறது மௌனம்
சத்தியத்தின் மலையுச்சியில்

சொல்லாதவைகளை இனியெப்போதும் சொல்வதாக இல்லை
இதுவரை உன்னிடமிருந்து பெற்றுக்கொண்டவை
துயர் தருபவை
தனிமை இரவின் கழுத்தைத் திருகி உயிர் குடிப்பவை

எனது நிழல்களும் பின்தொடர விரும்பாத பாதைகளில்
இனி இருக்கப்போவதில்லை
தடங்கள்

பொருள் குறித்த பாவங்களின் சலிப்போடு
இந்த முகம் உலர்கிறது
நா உலர்கிறது
தொண்டை உலர்கிறது
வார்த்தையும் உலர்கிறது

மணலென திரிந்து உயரும் மனதின் வெம்மையில்
இளைப்பாறிட உச்சியிலிருந்து
சற்றே நகர்ந்துகொள்கிறேன்
அர்த்தமிழந்த சிறு பாறையாக


  • நெடுநாள்

காத்துக்கொண்டிருக்கிறாள் அவனல்லாத இடத்தில்

ஒரு பைக் வருகிறது
ஹாரன் ஒலி அலற பாதையை உருட்டிக்கொண்டு
பாய்ந்தோடுகிறது
பின்னிருக்கையில் யாரையும் சுமக்காமல்

அடைத்துக்கொண்டு ஒரு பேருந்து வருகிறது
சுழன்று திமிரும் கரும்புகையோடு கடந்துபோகிறது
கசகசவென்று ஒரு மனித நேரம்

துளிகளில் தொடங்கி
மெல்ல கனத்து
சட்டென
ஆழங்கட்டி மழையொன்றும் வருகிறது

நடைபாதை கான்கிரீட்டில் மோதி சிதறுகிறது
அதுவரையிலான வெயில்
அதுவரையிலான மௌனம்
அதுவரையிலான வலி
அதுவரையிலான காத்திருப்பு


  • இங்கே வா..

தவிப்பின் புற வாசலில்
சிறு சிறு மலர்களாக பூத்திருக்கின்றன
உனது பழைய வருகைகள்

நீரூற்றி இன்னும் கொஞ்சம் வளர்த்திட
குவிக்கிறேன் உதடுகளை

இச் என்ற ஒலிக்குறிப்போடு
பறந்துகொண்டிருக்கிறது
மனம்


 கவிதைகள் வாசித்தவர் : அன்புமணிவேல்

 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
மோகன்

தனித்துவமான கவிதைகள்

You cannot copy content of this Website