cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்


  • மழைக்கால தவளைகள்

ழை விட்டபாடில்லை
தவளைகள் வயலின் அடிவயிற்றை
திருகி அழுகின்றன
முதலில் பெருந்துளிகள்
பிறகு சிறு சிறு கற்களென ஆரம்பித்து
இப்போது பெய்பவை பாறாங்கற்கள்
காலம் ஓடி ஓய்ந்துவிட்டது
மழை இன்னும் விடவில்லை
வயல்கள் தவளைகளின்
தலைகளை திருக ஆரம்பித்து விட்டன
இந்த பாறாங்கற்கள் அவ்வளவு இதமாயில்லை
இப்படியே எத்தனை நேரம்தான்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாய்
காமமே…
குரல்வளையைப் பின்னிக்கொண்டு நிற்கும்
தனிமைக்குள்தான் எத்தனை ஓட்டைகள்
தொப்பலாக நனைந்து நிற்கிறேன்
இனியும் உன்னை நம்பி பயனில்லை
நான் எப்போதோ தவளைகள் மிதக்கும் வயலாகிவிட்டேன்
பாறாங்கற்கள் நசுங்கி சிதற சிதற
தவளைகள் குரல் ஒடிந்து ஓயட்டும்
இறுதியில் இருவரும்
பெருமூச்சொன்று விட்டுக்கொள்வோம்.

  • மனமெனும் ரயில் வண்டி

து ஒரு ரயில்
விஸ்தாரமான நெடுந்தொடர் உருவம் அதற்கு
சில நேரங்களில் ஓடவும்
சில நேரங்களில் பறக்கவும் செய்யும்
ஓடும்போது ஒரு நரியைப்போலவும்
பறக்கும்போது பெரும் கழுகைப்போலவும்
தோன்றும்
பெரும்பாலும் ஓரிடத்தில் அது நிற்கும் குணமில்லை
நைந்த குப்பைகளை கிளறிச்செல்லும்
அதற்கு நீங்கள் மனமென்று பெயரிட்டு கொண்டால்
நான் பொறுப்பல்ல.

  • பொல்லா பூனை

பூட்டியே கிடக்கும் வீட்டுக்குள்
பொல்லாதப் பூனையொன்று சுற்றி வருவதாக
ஊரில் பேசிக்கொண்டனர்
இருளில் கருப்பு நிறமாகவும்
பகலில் ஒளியின் நிறமாகவும்
மாறும் தன்மை கொண்ட அது
ஊருக்குள் சுற்றும் வதந்தியில்தான்
ஊன் வளர்த்து வந்தது
நன்றாக கேளுங்கள்
அது பொல்லாத பூனைதான்
மேலத்தெரு சிவாவும் கீழத்தெரு அம்சாவும்
மழைக்கு ஒதுங்கிய ஒரு நாளில்
உறங்கிங்கொண்டிருந்த அந்த பூனை
விழித்துவிட்டது
பிறகென்ன?
ஊரில் காணாமல் போகிறவர்களையெல்லாம்
அந்த இல்லாத பூனைதான் தின்று சலிக்கிறதாம்
பொல்லாப் பூனைதானது.


 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website