cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

அம்பிகா குமரன் கவிதைகள்


  • வரைபடம்

முகாம்களைச் சுற்றிலும்
மதில்கள்
எழுப்பப்பட்டிருக்கின்றன
பிறந்த நாட்டில்
அகதிகளென
பெயரிடப்பட்டவர்களுக்கு
நீளம் தாண்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை
வானுயர்ந்த கட்டிடங்கள்
விலங்கிடப்படாத
சிறைச் சாலைகளாக இருக்க
புதிய புதிய சட்டங்கள்
மனிதத் தலைகளை
எண்ணுவதிலேயே முனைப்புக் காட்டுகின்றன
அதிகாரிகள் வருவதற்கான
முன்னேற்பாடுகள்
மக்களை கதவுகளிலிருந்து மீட்டு
புளிப்பில்லாத உணவின் வாசத்துக்குள் புகுத்திவிடுகிறது
வாழ்வதற்கென்ற
அடையாளச்சீட்டுகள்
கிழிந்த சட்டைப் பைகளில்
திணிக்கப்படுகின்றன
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டு
தேசத்தின் கைகளில்
பச்சை குத்தப்படுகிறது
இப்போது
சட்டத்திற்குச் சாட்சியாய்
உயிர் மட்டும் அழுந்திக் கொண்டிருக்க
முழுமையாகத் தரவிறக்கம்
செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில்
ஒதுக்கப்பட்ட எண்ணோடு
வரிசையில் நிற்கிறேன்
மதில் தன் வாயில் பூட்டுகளை
மீண்டும் ஒருமுறை
இழுத்துப்பார்த்துக் கொள்கிறது.


  • அஸ்திவாரம்

நகர்ப்புறக் குடியிருப்பில்
எத்தனையாவது மாடியோ தெரியாது
வாழ்க்கையின் அஸ்திவாரத்தை
அங்குதான் போடவேண்டும்.
இரவின் அருவிகள்
போல உறங்க முயற்சிக்கிறேன்
எந்தத் திசையில்
தலைவைத்து உறங்கியும்
புதிய தோரணைகள்
கண்களுக்குப் புலப்படவில்லை.
நகரச்சுவர் எழுப்பும்
சத்தங்கள்
எதிர் வீட்டு ஜன்னலுக்குக்
கூட கேட்பதில்லை
பெருமைதான் உயரமான கட்டிடத்தில் வசிக்கிறேன் என்பது
அலைபேசயில் பதிவு செய்தால்
கிடைத்துவிடுகிறது
ஏ டூ இஸட் வரை
கூகுளின் புதிய வழியாக வந்து
சேர்கிறது அத்தனையும்.
நிம்மதியான
தருணமென்பது
அகப்படாத கைதியாக ஓடிக்கொண்டிருக்கையில்
ஒரு சூழல்
நின்று பேசுகிறது
எதற்காக
இங்குவந்து
அஸ்திவாரத்தைத் தேடுகிறாய்
எதிர்காலம் என்பது வெற்றுச் சொல்
அத்தனைக்கும் ஆசைப்படாதே
நின்ற இடத்தில் விளையாடு
அவசரம் கருதி
உன்னை
நிகழ்காலப் பந்தாட்டத்தின் ரெப்ரியாக்கி விசிலை ஊது.
நிதர்சனம் அதுதான்
உன் கோட்டையில்
உனது கொடியின்
பறத்தலில் இருக்கிறது
நாளையின் முடிவு!


  • நம்பிக்கைச் சுவர்

நம்பிக்கை ஒரு மாயப் புள்ளியைத்
தொடுகிறது.

புள்ளி
நகர்ந்து இருப்பிடத்தை நிரப்புகிறது

தோதான என் மனதினை அசைத்து
சிலாகித்துப் பேசி சிரிக்க
நான் நம்பிக்கையானேன்

நம்பிக்கையின் பயணம்
ஊர்ந்தபடியே
வெற்றியின் அரண்மனையில்
குடிபெயர்ந்திருக்கிறது

இப்போது அதற்குள் வேர்களின் தன்மையை உணர்கிறேன்
மண் வாசம் கலந்த நீரை அருந்துகிறேன்

தேக நதி
பகல் இரவின் நிகழ்வுகளை
குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறது

சம்பவங்கள் யாவும்
வணிகமாக மாற
விரும்பிய திசையில் பயணிக்கிறேன்

ரகசிய வாழ்வின் நெருக்கடிகளை
நம்பிக்கை சுவர்களில்
எழுதி வைக்கிறேன்

நீண்ட வரலாறென்பது
புள்ளிகளில் தொடங்கி
புள்ளிகளாகவே நீள்கிறது!


 

About the author

அம்பிகா குமரன்

அம்பிகா குமரன்

திருப்பூரைச் சார்ந்த அம்பிகா குமரன் சமகாலத்தில் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவராக திகழ்கிறார், மரபுக்கவிதைகளிலும் நவீனக் கவிதைகளிலும் சிறப்பான படைப்பாக்கத் திறன் பெற்றவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல பொறுப்புகளை கவனித்த இவர், தற்போது திரைப்பட பாடலாசிரியராகவும், திரைப்பட துணை இயக்குநராகவும் பணிபுரிகிறார். “காலம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் இவரின் படைப்பாக்கத்தில் வெளிவந்துள்ளன. வேரல் புக்ஸ் எனும் பதிப்பகத்தை நிறுவி, கவனத்திற்குரிய பல நூல்களை பதிப்பித்தும் வருகிறார்.

Subscribe
Notify of
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
வீ.வைகை சுரேஷ்

அருமையான கவிதைகள் தேர்வு. மகிழ்ச்சியான துவக்கம்.

வீ.வைகை சுரேஷ்

அருமையான கவிதைகள் தேர்வு. மகிழ்ச்சியான துவக்கம்.

குடந்தை அனிதா

அட்டகாசமான ஆரம்பம்.
வாழ்த்துக்கள்.

Selvam kumar

வரைபடம் என்றும் தலைப்பில் உள்ள கவிதை நாடில்லாத வாழ்வை பிரதிபலிக்கிறது , மிகவும் அருமையான கவிதைகள் வாழ்த்துகள்

You cannot copy content of this Website