வெடியோசைகளைக் கேட்டபடி
கானகத்து எருக்கலம்
பற்றைகளினூடாக
காலாற நடைபோட்ட
நிலவரசியின் கனவுகள்
வணங்கா மண்ணோடு
அடங்கிப் போனது
அவளுக்குள் இருந்த
வண்ணக் கனவுகள் எல்லாம்
சாம்பலாகிப்போனதால்
தனக்குள்ளே
ஊமையாகிப்போனாள்
வல்லூறுகளின்
கோரப்பிடியில் சிக்கிய
சிறு பறவையின்
மன ஏக்கம்போல்
தன்மனதோடு போராடியபடி
வாழ்வின்
இறுதி மணித்துளிகளிற்காக
காத்திருப்பதாய் புலம்புகிறாள்
தகனம் செய்யப்பட்ட
அவள் கனவுகளைச் செப்பனிட
அவளால் மட்டுமே
முடியுமென்றாகிவிட்டது
ஒரு போதும்
கலங்காதவள்
கண்ணீர் சிந்துவதை
விரும்பாதவள்
இன்று
கண்ணீருக்குள் உழல்கிறாள்
குருதி குடித்த நிலத்தில்
கோரச் சாவுகளைக்கண்டு
துடித்தவளிற்கு
கருணை கூர்ந்து
மனவலிகளை மறப்பதற்காகவாவது
சற்றுத் தோள்கொடுங்கள்
எரிதனலால்
கனவு நிலம்
அழிந்ததைப் பார்த்து
சித்தம் கலங்கியவளின்
மனம்
அமைதி பெறட்டும்.
சகோதரியின் கவிதைகள் இதயக்குருதியால் எழுதப்பட்டவை..எனவே தான் வழியெங்கும் வடுக்களைச் சுமந்தபடி வருகின்ற அவரின் கவிதைகள். மருந்தாகும் காலமும் மலர வேண்டும் என்பதே எமது இதய ஆசை..!!