மேகத்தின் வழியே மறைந்திருந்து
பளிச்சென்று மினுங்கும்
ஒரு துண்டு ஒளி
சிறிய தங்க இழைப் பிறையில் இருந்து துவங்குகிறது
அறுவடைக் காலம்
பிறைக் கணக்குப்படி இருபத்தொன்பது
அல்லது முப்பது மின்மினிப்பூச்சி இரவுகள்
குச்சிகள் ஒவ்வொன்றாக
சுமந்து அலையும் பறவை
உதிர்ந்து இலைகள் தீர்ந்த மரக்கிளைகளில்
கூடு கட்டுகிறது
ஊருக்கு வெளியில் ஒரு நோன்பு
எல்லைகளுக்கப்பால் திரையிடப்பட்ட
புதிய புதிய மனிதர்கள்
பாரம்பரியமும் அல்லாத
பழக்கப்பட்டதும் அல்லாத
வேறு வேறு உணவுத் தட்டுக்கள்
ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டுள்ளன
இந்த பருவகாலத்தில் செய்யக்கூடாத
எல்லாவற்றிலும் இருந்து விலகி
சூடான பகல் பொழுதில்
ஒரு மிடறு நீரின்றி
ஒரு பருக்கை உணவின்றி
இறைவனின் ஆசிர்வாதத்தால்
குழப்பமான காழ்ப்புணர்ச்சியில் இருந்து மீளமுடிகிறது
காலியாகிக் கிடக்கும் வயிறு
ஆன்மாவை பரிசுத்தப்படுத்துகிறது
கடினமான நேரங்களைக் கடக்கும் வித்தைகளை
கற்றுக்கொள்ள முடிகிறது
மலக்குகளின் மாபெரும் படை
மேகத்தை தள்ளிக்கொண்டு பூமிக்கு இறங்கும்
எங்களால் முடிந்தவரை ஒளியை அள்ளலாம்.
லைலத்துல் கத்ர் என
அந்த இரவுக்குப் பெயர்
மஹ்ரிப் அதானுக்காக
பசித்தும் தாகித்தும் இருக்கும் அந்திகளில்
கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கிறது
பேரீத்தம் பழங்களும்.
நீர் நீறைந்த குவளைகளும்..
Art Courtesy : Dalia Mohmmad
Nice.. வாழ்த்துக்கள்