cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்


  • பெயரில் என்ன இருக்கிறது?

நடுங்க வைக்கும் அச்சத்தை,
காதுக்குள் பாயும் பேரிரைச்சலை,
எங்கோ நடக்கும் கொள்ளையை,
யாருக்கோ நடக்கும் வன்கொடுமையை,
இன்னும் மக்களுக்கு ஏற்ற போகும் சுமைகளை
ஆலோசிக்கும் மனங்களை,
யாருற்ற கானகத்தில் நகரும் உயிர்களின் இறப்பை,
நிறைவேறாத தொடரும் கனவுகளை நீங்களாகவே என் மீது
சுமத்திக் கொண்டு
ஏதேதோ மொழிகளில்
எழுதிக் கொள்கிறீர்கள்.
உங்களுக்குள் சபித்துக் கொள்கிறீர்கள்.
கொடும் இரவென செய்தி தருகிறீர்கள்.
நான் நானாகவே இருக்கிறேன் இருளின் போர்வைக்குள்
இரவென்ற பெயரில்.


  • எழுத்தின் பயணம்

வீதி உலா வருகிறது எழுத்து
சிறுவனின் கரத்தில் புகுந்து
நடனக்கலை பயில்கிறது
அன்னையின் விழி நுழைந்து
வாழ்த்துப் பாயில் இசைக்கிறது
ஆசானின் நாவில் விழுந்து
அறிவுரைப் படலத்தில் பயணிக்கிறது
தந்தையின் வியர்வைக்குள் கலந்து
உழைப்பின் தருணங்களை
ஊருக்கு விதைக்கிறது
பாட்டியின் அனுபவத்தில்
கதையென விளைகிறது
புத்தகக் கடலுக்குள்
புகுந்து கொண்ட எழுத்து நதி
பாதைகளைப் பிரசவிக்கிறது
கடவுளை தரிசித்த களிப்பில்
தெருமுனை திரும்பிய எழுத்து குடிகாரனைக் கண்டதும்
கும்பிட்டபடி
காணாமல் போனது காற்றுவெளியில்.

 


Spotify App -இல் இந்தக் கவிதைகளை கேட்கலாம்.

About the author

இளையவன் சிவா

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website