- சிட்டுக்குருவி பார்த்தல்
நேற்றைக்கு..
கூப்பிடக் கூப்பிட நிமிராமல்
அந்த மரத்தையே
வேடிக்கை பார்த்தாயே…
அப்படியென்ன இருந்தது அங்கே என்கிறாள்
தெருவோடு போகும் தெரிந்தவள் ஒருத்தி.
அதொன்றுமில்லை..
அங்கிரண்டு சிட்டுக்குருவி
அதைத்தான்…
என்று இழுக்கி வைக்கிறேன் சிரிப்பை.
சிட்டுக் குருவியையா
என்று ஏற இறங்கப் பார்த்துக் கடக்கிறாள்.
சிட்டுக்குருவி காணக் கிடைத்தது
என் நேற்றைய நாளின்
கொடுப்பினை என்பதை
எப்படிச் சொல்ல அவளுக்கு.
- இனி அடுத்து எப்ப..?
இனி அடுத்து எப்ப…?
வாடின முகத்தோடு
வதங்கின குரலை மெல்லக் கிள்ளி
என் மீது எறிகிறாள் அம்மா.
வந்திறங்குகையில் கண்ட திருமுகத்தை நகர்த்தி விட்டு
இனி இந்த வெறும் முகம்
மனமேறிக் கொல்லும்.
அடுத்து வரும் வரைக்கும்
சதா படுத்தியெடுக்கும்.
இடம்பெயரும் சக்திகளுக்கு
குலசாமி தரிசனத்தின் கணக்குதான்
குடியிருந்த கோயிலுக்கும்.
கரை உடையக் காத்திருக்கும்
குளங்கட்டிய கண்களைத்
திசைமாற்றிக் கடப்பது
அத்தனை சுளுவல்ல ஈருயிருக்கும்.
என்ன சொல்ல நான்..
எனக்கே தெரியாதே.
இனி அடுத்து எப்ப…?
- கேவும் மழை
அப்படியொரு ஆங்காரமாய்க்
கொட்டித் தீர்க்கிறது மழை.
எட்டிப் பார்த்தவளுக்கு
நகரத் தோன்றவில்லை.
அப்படியென்ன கோபமாம்
உள்ளங்கை நீட்டி
செல்லமாய்க் கேட்கிறேன்.
கேவல் கேட்க ஆளிருந்தால்
கேவிக் கேவி அழுமாம் பிள்ளை
அப்படித்தான்…
கையை நீட்டியதும்
முழங்கையோடு வழிந்து
மடியை நனைத்துக் கொண்டிருக்கிறது இப்போது.
- ஓய்வறியா ஓட்டம்
தள்ளாத வயசுல
வேகாத வெய்யிலை
இப்படித் தூக்கிச் சுமக்கனுமா யென்று கடிந்துகொண்டே
மோரை நீட்டுகிறேன்
காய்க்காரப் பாட்டிக்கு.
குடிகாரனக் கட்டிக்கிட்டு
அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுது மக…
பேத்தி இந்த வருசம் காலேசு
முடிக்கிது..
எப்புடியாச்சும் ஒரு வேலையைப் புடிச்சு அது நிமிந்துட்டா
நான் ஒக்காந்து சாப்புட்டுப் போறேன்
என்ன இப்போ..
என்று வெய்யிலொழுகப்
புலம்புகிறாள்.
இரவெல்லாம் அந்த முதுமைக்கு நான் விசனப்பட்டுக் கிடக்க..
நாளை வந்து புலம்புவாள்..
பாக்கியலட்சுமிக்கும்
பாண்டியன் ஸ்டோருக்கும்.
கவிதைகளும் குரலும் : அன்பு மணிவேல்
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :
சிறப்பாக மிளகர்கின்றன.
அன்பின் மகிழ் நன்றிகள் தோழர் 🙏 ❤️