cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

தீபிகா நடராஜன் கவிதைகள்


ஞ்சலாடித் திரிவதுதென்பது
அக்காவுக்குப் பெரும்போதை.
ராஜவீட்டு முற்றம்போல்
பலகையில் இல்லாமலும்
அதிநவீன வீட்டைப் போல்
கண்ணாடியில் இல்லாமலும்
நடுத்தரமான பிரம்பு ஊஞ்சலொன்று
அப்பாவால் ஆசிர்வதிக்கப்பட்டது.

ஆடுறதைத் தவிர வேலையே இல்ல
என்று அப்பத்தாவும்
வீட்டுக்குள்ள இப்படி ஆடுனா
தரித்திரம் வருமென்று அம்மாவும்
ஆடவே கிடைக்காத அண்ணனும்
மெதுமெதுவாய் அதை
பரணுக்கு நகர்த்தினர்.

வாக்கப்பட்ட வீட்டில்
ஊஞ்சல் இல்லாத குறையும்
ஆயிரம் ருபாய் கொடுத்து வாங்கியதென்ற
அம்மாவின் பெருமையுமே
அரித்திருக்கக் கூடும்
ஆட ஆள்ளற்ற அவ்வூஞ்சலை.

பிரத்யேகமாய்  சொல்லப்படும்
பிறந்தநாள் வாழ்த்துகளை
அவ்வளவு வெறுக்கிறேன்.

சாதாரண நாட்களில்
என் இருப்பு
உங்கள் கவனம் ஈர்ப்பதில்லை
என் இல்லாமை எந்த வெற்றிடத்தையும்
உருவாக்குவதில்லை
என் பெயரோ
நான் தந்த பரிசோ
சேர்ந்து வாங்கிய பொருளோ
எந்தச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.

பிரத்யோக தினங்களில் தான்
என்  நினைவுகளைத் தேடுகிறீர்கள்
புகைப்படங்களைத் தூசு தட்டுகிறீர்கள்
கதையோ கவிதையோ வரைய
தூரிகையைத் துடைக்கிறீர்கள்
உலகின் அன்பையெல்லாம்
நாமே பகிர்ந்துகொள்வோமென
சத்தியம் செய்கிறீர்கள்.

ஆனால்
உங்களுக்குத் தெரியுமா?
பிரத்யேகமாய் சொல்லப்படும்
பிறந்தநாள் வாழ்த்துகளை
அவ்வளவு வெறுக்கிறேன்.


 

About the author

தீபிகா நடராஜன்

தீபிகா நடராஜன்

என் கடலுக்கு யார் சாயல், புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Biochemistry & Biotechnology துறைக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website