ஒருநாளில்
ஒருமுறையேனும்
உனதும் எனதுமான
பழைய பதிவொன்றுக்கு
யாரோ ஒருவர்
விருப்பிட்டுச் செல்கிறார்
மெலிந்த பிளாஸ்டிக் பிடிகளில்
நீருறிஞ்சிய சொண்டின் முன்
விரல் நுனியில் மின்னும் பொன்னும்
வண்ணம் குழையாத காலடிக் குளிரும்
முகம் மறைத்து இசைக்கும் முதுகுப் பாடலும்
இல்லாமை குறித்து
வருத்தமுறுகிறேன்
விஷமேறிக்கொண்டிருக்கும்
இசையின் ஆர்ப்பரிப்பு
மெல்ல எழுந்து
அகாலத்தை உசுப்பும் போதெல்லாம்
நகைச்சுவை பதிவுகளைத் தேடி எடுத்து
நிலைத்தகவலாய் வைத்து
இந்த உலகுக்கு எதையோ
நம்பச் செய்கிறேன்
நான் நானாக இருந்த
இறுமாப்புகளின் மிச்சம் எது என்று
ஒவ்வொரு முறையும்
பகடை பார்க்கிறேன்
நள்ளிரவு நாய்களின் ஊளைக்கும்
நடந்து முடிந்த ஆட்டத்திற்குமான நேர்கோடொன்று
ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துசெல்வதை
காய்கள் நிச்சயிக்கின்றன.
கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆசிரியரே… கவிதை வரிகள் உன்னதமாக இருக்கின்றது. அதனை கேட்பதற்கு இனிமையாக உள்ளது…