1.
ஆதியின் மௌனத்தைப்
பிளக்க
ஆயிரந் துண்டுகளாகிறது
வானம்.
இலை நரம்புகளில்
எழுதி வைத்த
சமிக்ஞை மொழிகளில்
இரவின் வாசம்.
சிறகுகளை விசிறி
இடமும் வலமுமாய்
பறந்து களைக்கும்
பருந்து கண்களில்
படர்ந்து தெறிக்கிறது
ஆலகாலப் பசி.
ஆறாம் விரல்நீட்டி
வானக்கோடழித்து
நட்த்திரங்களை
வரிசையில்
அடுக்குமொருத்திக்கு
முதுகில் முளைக்கிறது
மூன்றாவது கண்.
2.
ஆகாய வனமெங்கும்
வேப்பமர முதிர்த்த
நட்சத்திரங்களில்
மதுவருந்த
மெல்ல தலைநீட்டும்
நாகணவாய்ப் புள்.
இடவலம் தலைதிருப்பி
சதிராடும் கலாபத்தின்
சிகண்டத்தில்
வண்ணச் சிதறல்.
மயிலாஞ்சி சிவப்பில்
நீளும் காந்தள் விரல்களில்
உருளும் சகடையாய்ப்
தாழ்ந்தேறும் தாம்புகளில்
ஏணியும் பாம்புமாய்ப்
பரமபதப் பக்கங்கள்.
உச்சியில் ஒளிரும்
பிறைநிலவைப்
பிடித்திழுத்து
பல்லாயிரமாண்டுப் பலியை
அவிர்ப்பாகமென
அதட்டிப் பெறுகிறாள்
அதர்வணக் காளி.
கவிதைகள் வாசித்த குரல் : ராணி கணேஷ்
Listen On Spotify :