cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

மதுரா கவிதைகள்

மதுரா
Written by மதுரா

1.

ஆதியின் மௌனத்தைப்
பிளக்க
ஆயிரந் துண்டுகளாகிறது
வானம்.

இலை நரம்புகளில்
எழுதி வைத்த
சமிக்ஞை மொழிகளில்
இரவின் வாசம்.

சிறகுகளை விசிறி
இடமும் வலமுமாய்
பறந்து களைக்கும்
பருந்து கண்களில்
படர்ந்து தெறிக்கிறது
ஆலகாலப் பசி.

ஆறாம் விரல்நீட்டி
வானக்கோடழித்து
நட்த்திரங்களை
வரிசையில்
அடுக்குமொருத்திக்கு
முதுகில் முளைக்கிறது
மூன்றாவது கண்.


2.

ஆகாய வனமெங்கும்
வேப்பமர முதிர்த்த
நட்சத்திரங்களில்
மதுவருந்த
மெல்ல தலைநீட்டும்
நாகணவாய்ப் புள்.

இடவலம் தலைதிருப்பி
சதிராடும் கலாபத்தின்
சிகண்டத்தில்
வண்ணச் சிதறல்.

மயிலாஞ்சி சிவப்பில்
நீளும் காந்தள் விரல்களில்
உருளும் சகடையாய்ப்
தாழ்ந்தேறும் தாம்புகளில்
ஏணியும் பாம்புமாய்ப்
பரமபதப் பக்கங்கள்.

உச்சியில் ஒளிரும்
பிறைநிலவைப்
பிடித்திழுத்து
பல்லாயிரமாண்டுப் பலியை
அவிர்ப்பாகமென
அதட்டிப் பெறுகிறாள்
அதர்வணக் காளி.


கவிதைகள் வாசித்த குரல் : ராணி கணேஷ்

Listen On Spotify : 

About the author

மதுரா

மதுரா

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் மன்னார்குடியைச் சார்ந்தவர். கவிஞர், கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்கி வருபவர் ! நவீனத்துவக் கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதுவதில் திறன் வாய்ந்தவராகவும் உள்ளார். இவரின் “சொல் எனும் வெண் புறா” , “பெண் பறவைகளின் மரம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website