cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோவின் நான்கு கவிதைகள்


  • அடுக்குகள் சரியும்போது..

நினைவுகளின் கடும் இருளைத் தாண்டி போய்விட
ஒரு பாதையை வனைகிறது
சுவரில் எப்போதோ நீ கிறுக்கிய பட்டாம்பூச்சி

இருவருமே சிறைப்பட்டு கிடக்கிறோம்
அநாதரவாக

மனச்சுவர் தடித்துகொண்டே நீள்கிறது

இடித்து தகர்த்திட
நிலவறையில் இறங்கி சொற்களைத் துழாவுகிறேன்
அங்கும் இருள் எங்கும் இருள்

மட்கிய வாசம் முழுவதும் இரக்கமேயில்லாமல் நீயே
நிரம்பிக் கிடக்கிறாய்

உடலில் படர்கின்ற பசலையைச் சுரண்டுகிறேன்
எங்கிருந்தோ அழைக்கிறது
துயரம் ததும்பும்
ஓர் இசை

கால் விரல்களில் மகரந்தம் சுமந்து வெளியேறிட
ஒரே ஒரு வானம் வேண்டுகிறேன்

பிறகுதான் உருவாக்குவேன்
நீயற்ற
ஒரு பெருங்காட்டை


  • எதுவாகவேணும் இருந்திருக்கலாம்

காமத்தின் ஊற்றுக்கண்ணை உற்று நோக்குகிறாய்
காதல் உகுத்து திளைத்திட
ஓர் இடைவெளி வேண்டும்

இந்தச் சுவற்றிலிருந்து மறுபக்க சுவரின் மீது
நகர்ந்து போகின்ற வெயிலின் நிறம்
பயணம் தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலும் மாறி போகிறது

இரவென உறைகின்ற குளிரில் ஒளிர்கிறது எனது மௌனம்
சில்லிட்ட நாவின் நுனி ஊர்ந்து அலைந்த ரகசியத்தை
எதிலும் பதுக்கிக்கொள்ள திட்டமில்லை

கண் திறவா பாவனையில் முகிழ்கின்ற தொடுத்தலில்
எய்யப்பட்ட உணர்வின் கூர்மையாகி
என்னைத் தைத்துக்கொண்டேன்
எதிலோ

வைகறைக்கு முன்பாக மொக்குடைந்து
பகரும் மலர்தலை ருசித்திட
அனுமதியில்லை

போ அப்பால்
மாயமாகு


  • நேர்க்கோட்டின் வளைவில்..

இருக்கிறேன் சுய நசிவின் திரள் என
வட்ட வடிவுகொண்டு வளிமண்டல வெளியில்
ஓர் இயக்கமாக

நீ புளுகும் பொய்களுக்கு இறகுகள் முளைத்து
பறவைகளாகும் தகுதியை
எனது சூரியனை வீசி நிராகரிக்கிறேன்

என்னை மீச்சிறு அளவில் கொஞ்சமாகத் தொகுத்து தந்திருப்பதில்
விடுபட்ட உணர்வின் தருணங்கள் எல்லாம்
ஞாபகத்தில் உள்ளனவா

இனி கட்டி எழுப்பலாம் அத்தனை கதைகளையும்
விடையற்ற கேள்விகளின் கொக்கிகளை
ஒவ்வொன்றாகக் கோர்த்து

உனக்கும் எனக்கும் நடுவில் நீர்த்துக் கிடந்தது
தனித்த இரவின் அடர்ந்த கம்பளம்
பின்னோக்கி நடந்து நடந்தே அடைந்துவிடலாம்
நமக்கான ஆகாயத்தை என்பது ஏற்பாடு

கரும்பள்ளத்தின் சுழற்சிக்குள் நுழையும் வரையில்
காத்திரு
அதில் இல்லை வெளியேற்றம்

இனி
எவ்வெப்போதும்


  • கடல் சூழாத தீவுகள்

முகத்தின் குறுக்கே நீந்துகிறது மீன்
நுரை பொங்கிடும் மௌனத்தால்
கடலென பெருகுகிறது
மனம்

நீந்தி கடந்திட
உப்புக்காற்றை ஊதுகிறேன்
செதில் செதிலாகக் கசியும் உயிரின் சுவையில்
குமிழ் விடுகிறது பிறவி

திக்கற்ற நட்சத்திரக் கூட்டம் ஒழுங்கீனத்தோடு
உருவாக்குகின்றன வாழ்வை

சூரியன் வருவதும் போவதுமான வேடிக்கைத்தான்
முற்றுப்புள்ளியை தள்ளிப்போடுகின்றன

நீந்தும் மீன்களுக்கு குறுக்கு எது
முகம் ஏது


கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்

Listen On Spotify : 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website